குரங்கு குட்டிக்காக ரிட்மனு தாக்கல் செய்த மருத்துவர்! சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ம.பா.கெஜராஜ்,
சோளிங்கரில் தெருநாய்களால் கடித்து குதறப்பட்ட குரங்கு குட்டிக்காக ஒரு கால்நடை மருத்துவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இது பற்றின விவரம் வருமாறு,
கோவையைச் சேர்ந்தவர் வி.வல்லையப்பன், கால்நடை மருத்துவராக உள்ள இவர், மதுரையைச் சேர்ந்த பிராணி மித்ரன் என்ற விலங்குகள் நல அமைப்பின் வாயிலாக கடந்த 2003 முதல் தமிழகம் முழுவதும் இலவச கால்நடை மருத்துவ சேவையை வழங்கிவருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த டிசம்பர் 4, 2023 அன்று, இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாய் கருத்தடை முகாமுக்குச் சென்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த வனக் காவலர் இரண்டு மாதங்களே ஆன குரங்கு குட்டி ஒன்றை அவரிடம் சிகிச்சைக்காக கொண்டு வந்தார். அந்த குரங்கு குட்டியை தெரு நாய்கள் கடித்து குதறியது என்று சொன்னார்.
அந்த குரங்கு குட்டியை பரிசோதித்த மருத்துவர் பல நாய் கடித்தால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழே செயலிழந்திருப்பதைக் கண்டறிந்தார். ஆகவே மருத்துவர் அந்த குரங்கு குட்டியை தனது பராமரிப்பில் எடுத்துக்கொண்டார்.
10 மாத தனிப்பட்ட கவனிப்புக்குப் பிறகு, குரங்கு குணமடைவதற்கான சிறந்த அறிகுறிகள் தெரிந்தது. ஆனாலும் அது இன்னும் உணவு, உறக்கம் மற்றும் உடல்கழிவு வெளியேற்றத்திற்கு அவரைச் சார்ந்திருந்தது.
ஆனால் வனத்துறை அதிகாரிகள், 2024 அக்டோபர் 26 அன்று விலங்கை அவரிடமிருந்து எடுத்துச் சென்று, சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அடைத்து வைத்தனர்.
எனவே மருத்துவர் வழக்கறிஞர் கே.கேசவனுடன் இணைந்து குரங்கு குட்டி முழுமையாக குணமடைய, மேலும் சில மாதங்களுக்கு இடைக்கால காவலில் வைக்கக் கோரி வனத்துறை அதிகாரிகளிடம் அக்டோபர் 28, 2024 அன்று மனு அளித்தததுடன், இதே கோரிக்கைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
குரங்கு மீண்டும் நோய்வாய்ப்படக்கூடும் என்று அஞ்சிய மருத்துவர், அதன் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்வதோடு, இடைக்கால காவலில் வைத்து தேவையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்க அனுமதித்தால், தேவைப்படும் போதெல்லாம் வனத்துறை அதிகாரிகளிடம் ஆஜர்படுத்துவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
"குழந்தை பசிக்காக உண்ணலாம் ஆனால் அதன் ஊட்டத்திற்காக உண்பது உறுதி செய்ய முடியாது. 10 மாதங்களுக்கும் மேலாக விலங்குடன் இருந்ததால், எனக்கும் விலங்குக்கும் இடையே உள்ள ஒருங்கிணைப்பை அதன் நலன் கருதி கருத்தில் கொள்ள வேண்டும். எனது முறையீடு முற்றிலும் தன்னலமற்ற நோக்கத்துடன் ஆனது," ஆகவே அந்த குட்டியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அளித்திருக்கிறார் அந்த மருத்துவர். இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்காக வருகிறது.
மேற்படி மருத்துவர் இந்திய விலங்குகள் நல வாரியத்தில் கௌரவ விலங்குகள் நல அலுவலராகப் பணியாற்றியவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழுவின் அங்கமாகவும்,மேலும் பல புகழ்பெற்ற அமைப்புகளில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் மருத்துவர் வல்லையப்பன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.