எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை! மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்!

B.Suresh,
தொழில் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபடும் பொதுமக்களில் சிலர் சாலை விபத்துக்களில் காயம் அடைந்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப.அவர்கள் தொடங்கி வைத்தார்.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் பல இயங்கி வருகின்றன. இப்பகுதியில் ஏதாவது விபத்து ஏற்பட்டு அதில் காயம் அடைந்தவர்களை உடனடியாக சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதிக நேரம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.எனவே விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகத் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை சார்பில் மஹேந்திரா வேர்ல்டு சிட்டி பகுதியை மையமாக கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நேற்றைய தினம் மஹேந்திரா வேர்ல்டு சிட்டி நுழைவு பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மஹேந்திரா வேர்ல்ட் சிட்டி சீனியர் பொது மேலாளர் சுனில்குரியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் ஃநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
மேலும்,நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பற்றி தலைமை இயக்குதல் அலுவலர் டாக்டர் வி.பி. சந்திரசேகர் விளக்கி பேசினார்.இதில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கூடுதல் பதிவாளர் முனைவர் டி.மைதிலி, தொடர்பு துறை இயக்குனர் ஆர்.நந்தகுமார், மஹேந்திரா வேர்ல்ட் சிட்டி பொது மேலாளர் தர்மேந்திரா, எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை மார்க்கெட்டிங் தலைமை அலுவலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.