வாக்குபதிவு அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை! தவறினால் நடவடிக்கை! தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை!

வாக்குபதிவு அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை! தவறினால் நடவடிக்கை! தொழிலாளர் ஆணையர் எச்சரிக்கை!

உ.சசிகுமார்,

 வாக்குப்பதிவு தினமான வரும் 19ம் தேதி அனைவரும் வாக்களிக்கும் வகையில், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும், மீறுபவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். 

 அந்த அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் உள்ஃ தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களான தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்குபதிவு தினமான வரும் 19ம் தேதி அவர்கள் வாக்களிக்கும் வகையில் அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

 கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் 19ம் தேதி வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்கவேண்டும். விடுப்பு நாள் ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும் பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

 தேர்தல் நாளான 19ம் தேதி விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது குறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

   மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் தொழிலாளர் இணை ஆணையர்-1 தே.விமலநாதனை 9445398801, 044-24335107 என்ற எண்ணிலும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எம்.வெங்கடாச்சலபதி 7010275131, 044-24330354 என்ற எண்ணிலும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ்சந்திரன் 8220613777, 044-24322749 என்ற எண்ணிலும், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் 9043555123, 044-24322750 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எல்லாம் சரிங்க அழைப்பை ஏற்பீங்களா சார் என்று மக்கள் கேட்கிறார்கள்?