இறையன்பு கையில் தகவல் ஆணையம்!

இறையன்பு கையில் தகவல் ஆணையம்!

 உ.சசிகுமார், 

  தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் பதவியில் உள்ள இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பணிக்காலம் நிறைவடையும் தருவாய் வந்துவிட்டது.

 இந்நிலையில் அவரை ஏதேனும் ஒரு பொறுப்பில் அமரவைத்து அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் தலைமையில் இயங்கக்கூடிய பதவிகள் சில உள்ளன.

 தலைமைச் செயலாளர் பதவியில் இருக்கும் இறையன்புக்கு குறைவான பதவி வழங்கிவிடக்கூடாது, அத்துடன் அவரது அனுபவம் தேவைப்படும் துறை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மாநில தகவல் ஆணையர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.

 தமிழ்நாட்டில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் கடந்த சில மாதங்களாக பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. தலைமை ஆணையராக இருந்த ராஜகோபால் அவருக்கு கீழ் இயங்கிய தகவல் ஆணையர்கள் பணிக்காலம் நிறைவடைந்ததால் அந்த பதவிதான் வழங்கப்படும் என பலரும் நம்புகிறார்கள்.

  அந்த இடத்தில் பொருத்தமான நபர்களை தேர்ந்தெடுக்கும் பணி ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது. அக்பர் அலி டீம் தயார் செய்த தகுதியான நபர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தனர். அந்த பட்டியலில் இறையன்புவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக சொல்கிறார்கள்.

  இந்த பட்டியலில் உள்ளவர்களிலிருந்து தலைமை தகவல் ஆணையர், பிற தகவல் ஆணையர்களை தேர்வுக்குழு தேர்வு செய்யும்.

   அந்த தேர்வுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இடம்பெறுவர்.

   மார்ச் 3ஆம் தேதி இந்த குழு தகவல் ஆணையர் மற்றும் பிற தகவல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும். அதன்பின்னர் அவர்களை தமிழ்நாடு ஆளுநர் நியமிப்பார்.

 அப்படியானால் அடுத்த தலைமை செயலாளர் யார் என்கிற கேள்வி உள்ளதல்லவா?