பேரிடரைச் சந்திக்கும் சென்னை மாநகரம்!

பேரிடரைச் சந்திக்கும் சென்னை மாநகரம்!

ம.பா.கெஜராஜ்,

சென்னை பேரிடரைச் சந்திக்கும் நகரமாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை தண்ணீர் நெருக்கடியை பெரிய அளவில் சந்தித்தது.

 அப்போதைய வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை இரயில்வே ஸ்டேஷனிலிருந்து தண்ணிர் நிரப்பட்ட டேங்கர் இரயில் சென்னைக்கு சுழற்சி முறையில் சப்ளை செய்தத்தை நினைவு கூறலாம்.

  இந்த தண்ணிர் பஞ்சத்துக்கு முன்னர் சென்னை பெரும் வெள்ளத்தை சந்தித்தது. இது பல முறை நிகழ்ந்துள்ளது.

  தானே புயல் 2011ஆம் ஆண்டிலும், 2015ல் நிலம் புயல், 2016ல் வார்தா புயல், 2017ல் ஒக்கி, 2018ல் கஜா, ஆனால் 2019ல் சென்னையில் கடும் தண்ணீர் வறட்சி,லதற்கடுத்து 2020 ஆம் ஆண்டு நிவர் புயல் என தொடர்ச்சியாக இயற்கைப் பேரிடர் மாற்றங்களை சென்னை சமாளித்து வருகிறது.

 குறிப்பாக, தமிழ்நாடு பெரும்பாலும் தனது தண்ணீர்த் தேவைக்கு இந்த பருவ மழைக் காலத்தையே நம்பியிருக்கிறது. பருவமழை பொய்த்துப் போகும் வருடங்களில் தண்ணீர் சார்ந்து மிகப் பெரிய சிக்கல்களை தமிழ்நாடு சந்திப்பது வழக்கம்.

 தீவிர புயல்கள் தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும்போது, அவை ஏற்படுத்தும் சேதம் ஒரு புறம் இருக்க தண்ணிர் தேவையை அது விட்டுச் செல்கிறது என்பதை காணமுடிகிறது.

 இந்நிலையில் காலநிலை மாற்றம் குறித்த தமிழ்நாடு அரசின் செயல்திட்டம் 2.0 ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

  அதாவது, கடந்த சில ஆண்டுகளில் பருவநிலையைச் சார்ந்து தமிழகம் அளவுக்கதிகமான நிகழ்வுகளைச் சந்திப்பது அதிகரித்திருக்கிறது.

  தமிழ்நாட்டின் மழைப் பொழிவைப் பொறுத்தவரை, 1951 - 2013க்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 987 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. குறைந்த அளவாக 317.4 மில்லி மீட்டரும் அதிக அளவாக 1890.5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளன.

 வடகிழக்கு மாவட்டங்களான கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், மேற்கு மாவட்டமான நீலகிரி ஆகியவை அதிக மழையைப் பெறுகின்றன.

தற்போது இதில் மாற்றம் காண துவங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தமிழ்நாடு ஏற்கனவே எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது என தமிழ்நாடு அரசின் செயல்திட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

  வெள்ளம், இடியுடன் கூடிய திடீர் மழை, வெப்ப அலை, வறட்சி, மின்னல், காட்டுத் தீ ஆகியவை ஏற்கனவே மக்களைப் பாதிக்க ஆரம்பித்துவிட்டதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

  காலநிலை மாற்றத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் வெப்பநிலையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கும்.

 1951-2013வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்த வெப்பநிலையோடு ஒப்பிடும் போது, இந்த நூற்றாண்டின் முடிவில் வெப்பநிலையானது 1.7 டிகிரி சென்டிகிரேட் முதல் 3.4 டிகிரி சென்டிகிரேட்வரை அதிகரிக்கக்கூடும்.

 இந்த நூற்றாண்டின் மத்தியில், அதாவது 2025 ஆம் ஆண்டு நெருக்கத்தில் வெப்பநிலை 1.0 டிகிரி முதல் 1.2 டிகிரிவரை அதிகரிக்கக்கூடும்.

 இந்தக் காலநிலை மாற்றத்தால் ஒட்டுமொத்த மழையளவானது இந்த நூற்றாண்டின் மத்தியில் 4.4 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்றும் நூற்றாண்டின் இறுதியில் 20.5 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

 இந்த கணக்கீடுபடி மழை அளவு அதிகரிக்கும் என்றாலும் கூட, மழை பெய்யும் நாட்கள் மிகவும் குறையும். உதாரணமாக தற்போது 60 நாட்களில் பெய்யும் மழை வெறும் இருபது நாட்களில் பெய்யும்.

  அப்படியானால்,ஒட்டு மொத்த வெள்ளம் தமிழகத்தில் பல நகரங்களை புரட்டிப்போடும். குறிப்பாக சென்னை மாநகரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும்.

 அதே போல் வெள்ளம் வடிந்ததும் அடுத்து வரும் காலத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.

  அது மட்டுமன்றி ஒரே நேரத்தில் மொத்த மழையும் பெய்வதால்,மழை நீரை சேமித்து வைப்பது கடினம்.

  இதனால் வறட்சி ஏற்படும்" என்று சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியரான எஸ். ஜனகராஜன் சொல்லியிருக்கிறார்.

  அதே போல்,  இந்தியாவில் மிக நீளமான கடற்கரையைக் கொண்டிருக்கும் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. கிட்டத்தட்ட 1070 கி.மீ. நீள கடற்கரை தமிழ்நாட்டில் இருக்கிறது. காலநிலை மாற்றத்தால் துருவப் பிரதேசங்களில் பனி உருகி கடல் மட்டம் அதிகரிக்கும்போது, அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கும் என்கிறார் ஜனகராஜன்.

   "தமிழ்நாடு மட்டுமல்ல, குஜராத், கொல்கத்தா, வங்கதேசம் போன்ற கடலோரப் பகுதிகளும் மூழ்க ஆரம்பிக்கும். இப்போதே தமிழத்தின் கடலோரப் பகுதிகளில் ஓதம் அதிகமுள்ள நாட்களில் கடல் நீர் பல மீட்டர் தூரத்திற்கு உள்ளே வருகிறது.

  இந்த தூரம் போகப்போக அதிகரிக்கும். வடசென்னையில் இப்போத பல இடங்களில் கடலரிப்பைப் பார்க்கிறோம். புவியின் மேல்மட்டத்தில் மட்டுமல்லாமல், நிலத்தடிக்குக் கீழேயும் கடல்நீர் உட்புகும்" என்கிறார் அவர்.

 

Council for Energy, Environment and Water என்ற அமைப்பு "Mapping India's Climate Vulnerability' என்கிற தலைப்பில் மாவட்ட அளவிலான காலநிலை பாதிப்பு குறித்த மதிப்பீட்டாய்வை மேற்கொண்டது.

அதன் பின் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலின்படி இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 12 வது இடத்தைப் பிடித்துள்ளது. அசாம், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனவாம்.

   இந்தியாவில்  27 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பேரிடரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

 காலநிலை மாற்றத்தால் மேற்கு மற்றும் மத்திய மாநிலங்கள் வறட்சியை எதிர்கொள்ளும். வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிக அளவு வெள்ளத்தை சந்திக்கும்.

  வெள்ளம், வறட்சி, புயல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை எந்த நகரம் அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்து ஒரு பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

   அந்தப் பட்டியலில் சென்னை இந்திய அளவில் 2வது இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூர் 83வது இடத்திலும் நாகப்பட்டினம் 91வது இடத்திலும் தூத்துக்குடி 97வது இடத்திலும் கடலூர் 101வது இடத்திலும் விருதுநகர் 134வது இடத்திலும் விழுப்புரம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்கள் முறையே 153, 154, 156 ஆகிய இடங்களிலும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.

  ஆக இது போன்ற பேரிடர்களை ஏற்கனவே எதிர்கொண்டுள்ள தமிழகம், குறிப்பாக சென்னை தகுந்த முன்னேற்பாடுகளை இம்முறையும் செய்து கொள்வது நலம்.