அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த உடன்பிறப்புகள்! உதயசூரியன் சின்னத்தை அழித்தனர்... பேனர்களை கிழித்தனர்!!

அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த உடன்பிறப்புகள்! உதயசூரியன் சின்னத்தை அழித்தனர்... பேனர்களை கிழித்தனர்!!

கு.அசோக்,

 ராணிப்பேட்டை மாவட்டம்பள்ளூரில், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளருடன்திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஊருக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் பறக்கவிட்டு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார்.  நெமிலி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஜெகத்ரட்சகன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

 இந்நிலையில் பள்ளூர், இலுப்பைதண்டலம் , கீழ் வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான வடிவேலுவுடன் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஊருக்குள் வரக்கூடாது.  நாங்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்வோம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

 அதனால் சில கிராமங்களுக்கு செல்வதை வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தவிர்த்தார் .ஆனாலும் பள்ளூர் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலுவுடன் வேட்பாளர் ஜெகத் ரட்சகன் சென்றார்.

 அப்போது ஊருக்கு வெளியே தயாராக நின்றிருந்த திமுகவினர், கையில் கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன்களை வைத்துக்கொண்டு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் உடன் வேட்பாளர் வந்தால் அவரை ஊருக்குள் விடமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஒன்றிய செயலாளருடன் ஊருக்குள் பிரச்சார வாகனங்களுடன் செல்ல முயன்றார், அப்போது திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர் . போலீசார் கோஷங்கள் எழுப்பியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த கருப்புக்கொடி , கருப்பு பலூன்களை பிடுங்கி கீழே எறிந்தனர். இந்த களேபரத்துக்கு இடையேவேட்பாளர் ஜெகத்ரட்சகன் , நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலு மற்றும் நிர்வாகிகள் பள்ளூரில் வாக்கு சேகரித்துவிட்டு அங்கிருந்து திரும்பினார்.

அப்போது  திமுக நிர்வாகிகள், இங்கு திமுக படுதோல்வி அடையும் என்று கோஷம் எழுப்பினர்.
அது மட்டுமன்றி ஏற்கனவே பள்ளூர்  பகுதி சுவர்களில் வரைந்திருந்த உதயசூரியன் சின்னத்தை அழித்திருந்தனர்.  மேலும் போஸ்டர்களை கிழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் விரட்டியடிக்கப்பட்டது குறித்து பள்ளூரை சேர்ந்த கிளைச் செயலாளர் சவுந்தர்ராஜன் கூறுகையில், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலு உடன் வேட்பாளர் எங்கள் கிராமத்துக்கு வரக்கூடாது.  நாங்கள் தேர்தல் வேலை செய்ய மாட்டோம். தேர்தலை புறக்கணிப்போம்.  கோயில் தர்மகத்தா மற்றும்  அனைத்து வேலைகளையும் எதிர்க்கட்சியினருக்கு அவர் தருகிறார்.  கட்சியினரை அவர் மதிப்பதில்லை என்றார்.

 அதே ஊரைச் சேர்ந்த பூத் ஏஜென்ட் செந்தில்குமார் கூறுகையில்,  கட்சியினருக்கு ஒன்றிய செயலாளர் உரிய மரியாதை தருவதில்லை.  அவர்கள் மீது நாங்கள் அதிருப்தியில் உள்ளோம்.  அதனால் வேட்பாளரை புறக்கணிக்கிறோம்.  ஊருக்குள் அவர்களை வரவிட மாட்டோம். ஒன்றிய செயலாளர் வடிவேலுவை மாற்ற வேண்டும் என்று சொன்னார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளருக்கு திமுகவினரே எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நெமிலி பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.