அப்பாடா....! சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் ராஜேந்திர பாலாஜி!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி மோசடி செய்ததாக தேடப்பட்டு வந்தார். அவரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 5-ந்தேதி கர்நாடக மாநிலத்தில் பிடித்தனர்.
பின்பு அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
அந்த நிபந்தனைகளில், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போலீஸ் நிலைய எல்லையை தாண்டி பயணிக்கக்கூடாது, விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் கூறப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஜாமின் சம்பந்தமான ஆவணங்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜேந்திர பாலாஜியை ஜாமினில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த வகையில் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜேந்திர பாலாஜி ஜாமினில் இன்று காலை வெளியே வந்தார்.