8 கோடி மக்களை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கே! காவலர் பயிற்சி பள்ளியில் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
எட்டு கோடி மக்களை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கே என காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு இ.கா.ப.அவர்கள் பேசினார்.
இன்று 17.03.2021 - ம் தேதி வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் முனைவர். சி.சைலேந்திரபாபு, இ.கா.ப அவர்கள் வருகை புரிந்து அங்கு பயிற்சிப் பெற்று வரும் 179 பெண் காவலர்கள் மற்றும் தற்காலிக பயிற்சிப் பள்ளி நேதாஜி ஸ்டேடியத்தில் பயிற்சிப் பெற்று வரும் 146 ஆண் காவலர்கள் என மொத்தம் 325 பயிற்சி காவலர்களுக்கிடையே உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் 125 ஆண்டு கால சரித்திர புகழ் கொண்ட வேலூர் காவல் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி காவலர்களாக பயிற்சிப் பெற்று இந்தியாவில் மூன்றாமிடத்தில் இருக்கும் தமிழக காவல் துறையில் காவலர்களாக பணியாற்ற இருப்பதை நினைத்து நீங்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
மேலும் பயிற்சி காலத்தில் மிகுந்த ஒழுக்கத்துடனும், பணிவுடனும், உடற்பயிற்சி,சட்டம்,தடய அறிவியல், பெண்கள் மற்றும் சைபர் சார்ந்த குற்றங்களைப் பற்றிய பயிற்சிகளை நல்ல முறையில் கற்றுத் தேர்ந்த காவலர்களாக பயிற்சி முடித்து வெளியே வந்து 8 கோடி மக்களை பாதுகாக்கும் பொறுப்பு மிக்க காவலர்களாக வர வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர்.ஜ.ஆனி விஜயா.இ.கா.ப , அவர்களும் , நான்கு மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்களும், பயிற்சி கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் உடனிருந்தனர்.