ஓ.பி.எஸ்ஸை அ.தி.மு.க.விலிருந்து நீக்க அஸ்தீர கூட்டம்! துரோகத்தின் அடையாளம் என சொல்கிறார் ஜெயக்குமார்!

ம.பா.கெஜராஜ்,

 அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு அதன் பின்னரே தலைமை அலுவலகத்திற்கு வந்தார். 

  பின்னர் அங்கே கூட்டம் நடைபெற்றது. பொருளாளராக உள்ள ஓபிஎஸ் அந்த கூட்டத்தில் நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின. அவ்வாறு நீக்கப்பட்டால் அவருக்கு பதில் பொருளாளராக கே பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

   ஜூலை 11 ஆம் தேதி செயல்வடிவம்எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் பறிக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இன்றைய தினம் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "தலைமை கழக நிர்வாக குழு கூட்டத்தை கூட்ட தலைமை நிர்வாக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உரிமை உண்டு.

 கூட்டத்தில் நிறைய பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அது சீக்ரெட். அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது. எல்லா முடிவுகளும் வரும் ஜூலை 11 ஆம் தேதி தெரியவரும் என்றார்.

 எனவே ஓபிஎஸ்ஸின் பதவிகளை பறிக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.

 11- ஆம் தேதி என்ன நடக்கும்? ஒரு வேளை ஜூலை 11 ஆம் தேதி ஓ.பி.எஸ்.ஸின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டால் அந்த பதவி வன்னியர் சமூகத்தை சேர்ந்த கே.பி.முனுசாமிக்கு வழங்கப்படும். மேலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி தேவர் சமூகத்தை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. காரணம் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். எனவே அந்த சமூகத்து மக்களை திருப்திப்படுத்த பொருளாளர் பதவி அல்லது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு கொடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.

  பொருளாளர் பதவி கே.பி.முனுசாமிக்கு கொடுக்கப்பட்டால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கா இல்லை நத்தம் விஸ்வநாதனுக்கா என்ற கேள்வி எழுகிறது.

 இவர்களில் திண்டுக்கல் சீனிவாசன்தான் சீனியர், இவர் ஜெயலலிதா காலத்தில் பொருளாளராக இருந்தவர்.  திண்டுக்கல் சீனிவாசனுக்கே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 ஆக மொத்தத்தில் ஓ.பி.எஸ்.ஸை அ.தி.மு.க.விலிருந்து நீக்கவே இந்த அஸ்தீர கூட்டம் என இது பார்க்கப்படுகிறது.

மேற்படி கூட்டம் நடைபெற்ற நேரத்தில் வெளியே எடப்பாடியின் ஏற்பாட்டின் பேரில் ஓ.பி.எஸ்ஸின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. பின்னர் மாலை கிழிக்கப்பட்ட பேனாவை அகற்றிவிட்டு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டோ இடம்பெற்ற புதிய பேனர் வைக்கப்பட்டது.

 மேற்படி அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் சட்ட ரீதியானது என்று சி.பொன்னையன் தெரிவித்துள்ளார்.

 அதே வேளையில் இந்த ஆலோசனை கூட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். மேலும் 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர்.

    அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓபிஎஸ் செய்துள்ளார். துரோகத்தின் அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த ஓபிஎஸ் அவர்கள் இன்று அவசரமாக சென்னைக்கு விமானம் மூலம் திரும்பினார் நாளை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர் போட்டி கூட்டம் நடத்துவார் என்று கூறப்படுகிறது.