இப்படித்தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்:- வேலூர் ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி!

ஜி.கே.சேகரன்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் பணி தொடர்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் வாக்கு எண்ணும் பணி தொடர்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 19.04.2024 அன்று நடைபெற்று முடிந்து, வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் தொரப்பாடியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது 04.06.2024 அன்று காலை 8.00 மணியளவில் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் எண்ணுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையிலும், காலை 8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை சம்மந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான அறையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் துவங்கி நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாக்கு எண்ணும் மையத்திற்குண்டான அனைத்து வகையான ஒழுங்கு மற்றும் ஒழுக்கத்தினை கடைபிடிக்க வேண்டும்.
இதனை பராமரிக்க காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அறை/அறைகளுக்கு போதிய அளவில் உதவி ஆய்வாளர் நிலையில் காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டிய நபர்களின் விவரம்.
வாக்கு எண்ணுகை மேற்பார்வையாளர், வாக்கு எண்ணுகை உதவியாளர், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள்.
மற்றும் பொதுபார்வையாளர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள் , வாக்கு எண்ணுகை பணியில் ஈடுபடும் இதர பணியாளர்கள், வேட்பாளர்/வேட்பாளரின் பொது முகவர்/ வாக்கு எண்ணுகை முகவர்,உரிய அடையாள அட்டையுடன் உள்ள பத்திரிக்கையாளர்கள்/ ஊடகவியலாளர்கள்.
மேற்கண்ட அனைத்து நபர்களுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையினை சரிபார்த்து உள்ளே அனுமதிக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் நாளில் குடிநீர் வசதி, மைய வளாகத்தினை குப்பைத் தொட்டிகளை அமைத்து சுத்தமாக பராமரித்தல், கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்தல்,கழிவறை வசதியினை ஏற்படுத்துதல், போதிய அளவில் சுகாதார பணியாளர்களை பணியமர்த்துதல் வேண்டும்.சுகாதார துறை சார்பாக ஒரு மருத்துவமையம் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட வேண்டும்.
போதிய அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், முதலுதவி மருந்துகள் மற்றும் 2 ஆம்பூலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.