திருப்பத்தூர் ஏரியில் படகு விட்டு சுற்றுலாத்தலமாக மாற்றம்!

கு.அசோக்,
திருப்பத்தூர் பெரிய ஏரியில் படகு விட்டு அதை சுற்றுலாத்தலமாக மாற்ற திட்டமிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்கள் மற்றும் பெரிய ஏரி ஆதிதிராவிடர் நல விடுதி உள்ளிட்ட இடங்களை கூடுதல் தலைமை செயலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களையும் திருப்பத்தூர் பெரிய ஏரி பகுதிகளிலும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியிலும் மாவட்ட கண்காணிப்பாளரும் கூடுதல் தலைமை செயலருமான தென்காசி ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் பெரிய ஏரியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு ஏரியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றி தூர்வாரி கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதாகவும், ஏரியில் படகு விட்டு சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு ஏற்ற வகையில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் கழிவறை குடிநீர் ஆரோக்கியமான உணவு உறங்குவதற்கு போதுமான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாணவிகளுக்கு கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மாணவிகளின் கல்விக்கு தேவைப்படும் நோட்டு புத்தகங்கள் குறித்தும் கல்வித் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து மழையில் மாணவிகளின் துணிகள் நனைந்து கொண்டிருப்பதை கண்ட மாவட்ட கண்காணிப்பாளர் இங்கு உடனடியாக துவைத்த துணியை காய வைப்பதற்கு ஏற்ற வகையில் ஷெட் அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.
மேலும் வேறு ஏதேனும் தேவைகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண் உட்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் மாணவிகளிடம் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின்பொழுது மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.