1.50 கோடி மதிப்பில் கிராம சாலை பணிகளை பார்வையிட்ட வேலூர் ஆட்சியர்!

த.நெல்சன்,
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அடுக்கம்பாறை ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் குறவர் குளத்தினை தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அடுக்கம்பாறை ஊராட்சியில் திரௌபதி அம்மன் கால்வாயில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், ரூ.8.67 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நியாய விலை கடையினையும் பார்வையிட்டார். தொடர்ந்து, மூஞ்சுற்பட்டு, மாந்தோப்பு ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளையும்,அடுக்கம்பாறை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் ரூ.7.72 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நெற்களத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, பின்னர் மூஞ்சுற்பட்டு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சமையலறை கட்டிடம் மற்றும்
மாந்தோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூபாய் 5.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான தனி கழிவறையையும், கடலூர் சித்தூர் ரோடு முதல் கட்டுப்படி ரோடு வரை ரூ. 1.50 கோடி மதிப்பில் முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.