பாறைகளின் மீது வாழும் இருளர் இன மக்கள்! அலுவலர்கள் கண்டு கொள்வார்களா?

ஜி.கே.சேகரன்,
ஆண்டியப்பனூர் அருகே வசிக்கும் இருளர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீடுகளை வழங்கி அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டியப்பனூர் அருகே சுமார் 50க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இருக்க இடமின்றி ஏரிக் கரையின் ஓரமாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
சமீப தினங்களாக பருவமழையின் தாக்கம் யாரையும் விட்டு வைக்காத நிலையில், மேற்படி பகுதி இருளர் இன மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ஏரியின் கரையோரங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் இருளர் இனமக்களின் குடிசைகளில் வெள்ளம் நுழைந்தமையால் குடிசையை விட்டு விட்டு பாறைகளில் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் எங்கள் பகுதியிலிருந்து வெளியேறி பாறைகளின் மீது வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
துறை சார்ந்த அதிகாரிகளும் தமிழகத்தின் முதல்வரும் எங்கள் மீது கருணை கொண்டு எங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றனர்.