மாணவர்கள் படிக்க தடை போடும் ஊராட்சி தலைவர்! நடவடிக்கை கோரி பெற்றோர் புகார்!!

கு.அசோக்,
திமிரி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்ற செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீது கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதிக்குட்பட்ட திமிரி சிட்டந்தாங்கள் ஊராட்சி மன்றத்தின் தலைவராக உமாபதி என்பவர் பதவி வகித்து வருகின்றார்.
இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி சிட்டந்தாங்கள் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை எவ்வித முன் அறிவிப்பின்றி கோடாலி கிராம பகுதிக்கு இடமாற்றம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஊராட்சி மன்ற நிர்வாகம் சம்பந்தமாக வரவு செலவு கணக்குகளை கிராம சபை கூட்டத்தின் போது சிட்டந்தாங்கள் பகுதி மக்கள் கேள்வி எழுப்பியதற்கு முறையான பதில் தெரிவிக்காமல் பொதுமக்களை மிரட்டும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் பேசியதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து சிட்டந்தாங்கள் கிராம பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப அரசு பள்ளியின் கட்டிடம் மிகவும் பழமையானதன் காரணமாக அவை இடிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தற்காலிகமாக பள்ளி மாணவ மாணவிகள் அப்பகுதியில் உள்ள நூலகத்தில் தங்க வைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது நூலகத்தில் நடத்தப்பட்டு வரும் பாட வகுப்புகள் நடத்த கூடாது எனவும் மாணவ மாணவிகள் நூலகத்திற்கு செல்லக்கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவிப்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இதனை அடுத்து கலவை சிட்டந்தாங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து ஊராட்சி மன்ற தலைவர் உமாபதியின் செயல்பாடுகளை குறித்து புகார் மனுவினை வழங்கினர்கள்.
பிறகு புகார் மனுவை பெற்று கொண்ட மாவட்ட அரசு அதிகாரிகள் மனுவின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்