துருக்கியை துயரத்தில் தள்ளிய நில நடுக்கம்! 20,000 பேர் பலி என உலக சுகாதார அமைப்பு கணிப்பு!

ம.பா.கெஜராஜ்,
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கங்கள் காரணமாக சுமார் 4,500 பேர் பலியாகியிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 20,000 த்தை கடக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இது பற்றின விவரம் வருமாறு,
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது.
மேலும் இது பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன. காசியான்டெப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது. குறிப்பாக நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 10 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின.
அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்து தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமானதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின.
நிலநடுக்கத்தின்போது துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின.
சுமார் 2,000 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிந்த கட்டிடங்களில் ஆஸ்பத்திரிகளும் அடங்கும். மலைபோல் குவிந்துகிடக்கும் கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்க ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு, பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி நிலநடுக்கம் பாதித்த இடங்களில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருவது மீட்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை 4500 பேர் பலியாகியிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது.