சிக்கன் பிரியாணிக்காக காக்காவை சுட்ட வாலிபர்!

சிக்கன் பிரியாணிக்காக காக்காவை சுட்ட வாலிபர்!

 ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,

 பொள்ளாச்சி அருகே, விஷம் வைத்து காகங்களை பிடித்துக் கொன்ற நபரை பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். 'பிரியாணிக்காக காகங்கள் வேட்டையாடப்பட்டதா' என போலீசார் விசாரிக்கின்றனர்.

  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பெரியாக்கவுண்டனூர் பகுதியில், சில நாட்களாக மர்மமான முறையில் காகங்கள் இறந்து வந்தன. காரணம் புரியாமல் விவசாயிகள் குழப்பமடைந்தனர். இந்நிலையில், விவசாயி நாகராஜ் தோட்டம் அருகே, சந்தேகப்படும்படியான நபர் ஒருவர், சாக்குப்பைகளில், இறந்த காகங்களை போட்டுக்கொண்டு இருந்தார். அதைக்கண்ட நாகராஜ் விசாரிக்க முற்பட்டார். உடனே அந்த நபர், இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார்.

 அவரை விவசாயிகள் துரத்திச் சென்று சந்திராபுரம் அருகே மடக்கிப்பிடித்தனர். மீண்டும் பெரிய கவுண்டனூர் அழைத்து வந்தனர். அந்த நபரிடம் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

  பெரியாக்கவுண்டனூரில் சுற்றித்திரிந்த இந்த நபர், மூக்குப்பொடியுடன் ஏதோ விஷ மருந்து கலந்து தூவியுள்ளார். அதை உட்கொண்ட காகங்கள் மயங்கி விழுந்தன. தோட்டங்களிலும், ரோட்டோரங்களிலும் மயங்கி விழுந்த 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து விட்டன.

  அவற்றை அந்த நபர் சாக்குப்பைகளில் சேகரித்து தப்பியோட முயன்றார். அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தோம்.

இந்த நபர் தூவிய மருந்தை உட்கொள்ளும் கால்நடைகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.  அநேகமாக இந்த காக்கை கறி சிக்கன் பிரியாணிக்காக பயன்படுத்தப்படும் என்று சந்தேகிக்கிறோம். அதிகாரிகள் தான் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

   காகங்களை கொன்ற நபரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அவர், சிஞ்சுவாடியை சேர்ந்தவரான, சர்க்கஸில் வேலை பார்க்கும் சூர்யா, 37, என்பது தெரியவந்தது. குஜராத்தில் இருந்து வந்த அவர், சிஞ்சுவாடியில் நீண்ட காலமாக வசிக்கிறார்.

   வெள்ளை படை நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிப்புக்காக காகங்களை கொன்றதாக கூறினார். அதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

   மருந்து தயாரிப்புக்காக காகங்களை வேட்டையாடினேன்' என்று அந்த நபர் கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று அப்பகுதிவாசிகள் சொல்கிறார்கள்