ரேஷன் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்! பெண் இன்ஸ்பெக்டரின் துரித நடவடிக்கையால் மோதல் தவிர்ப்பு!

ரேஷன் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்! பெண் இன்ஸ்பெக்டரின் துரித நடவடிக்கையால் மோதல் தவிர்ப்பு!

கு.அசோக்,

  ரேஷன் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளரால் வன்முறை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதை  பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் எடுத்த துரித நடவடிக்கையால் மோதல் தவிர்க்கப்பட்டது.

  நாட்டறம்பள்ளி அருகே அரசு இடத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம்,  நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில்  சுமார் 200 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அங்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு லட்சுமிபுரம் பகுதியில்  வாடகை இடத்தில்  பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வந்தது.

 இந்த நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர் கடந்த 7 மாதங்களாக ரேஷன் கடையை காலி செய்து தரும்படி கேட்டுள்ளார்.

 ஆகவே, அந்த கிராம மக்கள் அதே கிராமத்தில் உள்ள ஒரு அரசு இடத்தில் ரேஷன் கடை கட்டி தரும்படி  ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். பின்னர் புதியதாக  ரேஷன் கடை கட்ட அங்குள்ள  அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தை  தேர்வு செய்தனர். பின்னர் அங்கு புதிய ரேஷன் கடை கட்டி தர  எம்.எல். ஏ தேவராஜிடம் ஊராட்சி மன்ற தலைவர் ராமன் கோரிக்கை வைத்து வந்தார்.

  இந்த கோரிக்கையை ஏற்று அங்கு  புதியதாக ரேஷன் கடை கட்டிடம்  கட்ட ஜோலார்பேட்டை  எம்.எல். ஏ தேவராஜ் தன்  சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.6.50 லட்சத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கீடு செய்தார்.

  இந்த நிலையில் அங்கு புதியதாக ரேஷன் கடை கட்ட இன்று ஊராட்சி நிர்வாகத்தினர் அந்த இடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

   அப்போது அந்த இடத்துக்கு பக்கத்தில் அரசு இடத்தில் வீடு மற்றும் கடை கட்டி வசித்து வரும் வீரராகவன் என்பவரி குடும்பத்தினர்  இங்கு  ரேஷன் கடை கட்ட கூடாது என்று அப்பணிகளை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  இதனால் அந்த கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து இங்கு கிராம மக்கள் பயன்பாட்டிற்கு ரேஷன் கடை கட்டுவதால் இதை தடுக்க கூடாது என்று கிராம மக்கள் அந்த நபரின் குடும்பத்தினருடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 மேலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.இது குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் சம்பத் மற்றும் நாட்டறம்பள்ளி  காவல்  நிலைய இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

 அப்போது அந்த தனி நபரின் குடும்பத்தினர்,தாசில்தார் மற்றும் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்த போதும் இன்ஸ்பெக்டர் லதா மோதலுக்கு தயாரானவர்களை சமாதானப்படுத்தி பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்தார்.

பின்னர் வருவாய் துறையினரை வரவழைத்து தேர்வு செய்யப்பட்ட  அதே இடத்தில் ரேஷன் கடை கட்ட அளவீடு செய்யும் பணியை தொடங்கினர். மேலும் இது அரசு இடம் இங்கு ரேஷன் கடை கட்டுவது உறுதி யாரும் இதை தடுக்க கூடாது என்று எச்சரித்தனர்.இதனால் அங்கு சிறிது பரபரப்பான சூழல் நிலவியது.