சிறிய துளை..சிங்கிள் மேன்...சிங்க முகம், ருத்ராட்சை...ஜோஸ் ஆலுக்காஸ் நகை கொள்ளையன் கைது! ஐந்தே நாளில் சாதித்த காவல் துறை!

ம.பா.கெஜராஜ்,
ஜி.கே.சேகரன்,
 சிங்கிள் மேன்...சிங்க முகம் மாஸ்க், தங்க காப்பு ருத்ராட்சை மாலை... அணிந்து ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடையில் கொள்ளையடித்தவன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து தங்க நகை உருப்படிகள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஐந்தே நாளில் துப்புத் துலக்கி காவல் துறையினர் சாதித்துள்ளார்கள்.
 கடந்த 19 ஆண்டுகளாக முடிவுக்கு வராத "நாகா ஜூவல்லரிஸ்" கொலைவழக்கு மாதிரி இது இல்லாமல், வேலூர் சரக காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர். 
இதனால் காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  
 கடந்த 15.12.2021-ம் தேதி விடியற்காலையில் காட்பாடி ரோடு, தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பின்புற சுவற்றில், அடையாளம் தெரியாத நபர் துளையிட்டு உள்ளே நுழைந்து சுமார் 15.9 கிலோ மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றான்.


 இந்த கொள்ளையை நடத்தியவன் சிங்க முகம் மாஸ்க் அணிந்ததோடு கையில் ஸ்பிரே கன் எடுத்து வந்து சிசிடிவி கேமிராக்களை மறைத்தான்.
 அதன் பேரில் ஜோஸ் ஆளுக்காஸ் நகைக்கடையின் மேலாளர் அளித்த புகாரினை பெற்று வடக்கு குற்றப்பிரிவு காவல்நிலைய குற்ற எண்.337/2021 பிரிவு 457, 380 இ.த.ச வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 இது தொடர்பாக காவல்துறை இயக்குநர் திரு.சி.சைலேந்திரபாபு, இ.கா.ப.,கூடுதல் காவல்துறை இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.தாமரைக்கண்ணன், இ.கா.ப. ஆகியோர்களின் உத்தரவின் பேரில் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சந்தோஷ்குமார், இ.கா.ப., வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.ஏ.ஜி.பாபு,இ.கா.ப. அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஷ்கண்ணன், இ.கா.ப. தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
  முதற்கட்ட விசாரணையில் களவுபோன ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் உள்ளே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் அடையாளம் தெரியாத நபர் முகத்தில் சிங்கம் மாஸ்க், தலையில் விக் அணிந்து கொண்டு உள்ளே நுழைந்து அங்குள்ள சிசிடிவி கேமிராக்களின் மீது கலர் சாயம் அடித்து 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளை அடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
 பின்னர்,இதுசம்மந்தமாக அடையாளம் தெரியாத அக் குற்றவாளியை கண்டுபிடிக்கவும் மற்றும் பழங்குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் ஆந்திரா, பெங்களூர், திருச்சி ஆகிய இடங்களுக்கு தனிபடையினர் அனுப்பப்பட்டது. 
 இரண்டாம் கட்ட விசாரணையில் வேலூர் உட்கோட்டத்தில் அமைந்துள்ள கார்ப்பரேஷன்,போலிஸ் மற்றும் தனியார் அமைப்புகளின் மூலம் வைக்கப்பட்ட 200-க்கும் மேற்ப்பட்ட சிசிடிவி பதிவுகள் தணிக்கை செய்யப்பட்டது. 
 இத்தணிக்கையில் கிடைத்த சந்தேக நபரின் அடையாளங்களை வைத்து தீவிர விசாரணை செய்ததில் குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த டீக்காராமன் (22) த/பெ விஜயன் என்பவரை அடையாளம் கண்டு 20.12.2021 ஒடுக்கத்தூர் பாலத்தின் அருகே தனிபடையினர் கைது செய்து விசாரித்தனர். (கொள்ளையன் வாடகை வீட்டில் தங்கியிருந்த போது பிடிபட்டதாகவும், அவன் மீது பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் லேப்டாப் திருட்டு புகாரும் உள்ளதாகவும்,  ஆகவே அந்த பாடி லேங்குவேஜை வைத்து அமுக்கியதாகவும் கூறப்படுகிறது)
 அதே போல் ருத்ராட்சை மணி (தங்கம்) மற்றும் கையில் தங்ககாப்பு அணிந்திருந்தானாம். அதை செல்போனில் படம் பிடித்து ஜோஸ் ஆலுக்காஸ் மேளாலருக்கு போலிசார் அனுப்பி சோதனை செய்ததில் அது தங்கள் கடையில் திருடு போன நகைதான் என்றது உறுதியானதாம்.
  பிடிபட்ட மேற்கண்ட நபர், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் உள்ளே புகுந்து முகத்தில் சிங்கம் மாஸ்க், தலையில் விக் அணிந்து கொண்டு நகைகளை கொள்ளை அடித்தை ஒப்புக்கொண்டு பிறகு கொள்ளையடித்த நகைகளை ஒடுக்கத்தூர் சுடுகாட்டில் புதைத்து வைத்து இருப்பதாக பிடிப்பட்டவன் தெரிவித்தான். 
 அதன்பேரில் தங்கம் மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டது. 


  களவுபோன 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளின் மொத்த மதிப்பு ரூ.10 கோடி ஆகும். களவுபோன 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை இரவு பகல் என்று பாராமல் சம்பவம் நடந்த 5 நாட்களில் கண்டுபிடித்த தனிப்படையினரை காவல்துறை இயக்குநர், கூடுதல் காவல்துறை இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு, வடக்கு மண்டல காவல் துறை தலைவர், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
  இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஐஜி.ஏ,ஜி.பாபு மற்றும் எஸ்.பி.உள்ளிட்ட காவல் அலுவலர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
 இந்த கொள்ளை வழக்கில் கைப்பற்றப்பட்ட நகை ஆபரணங்களை உருக்கப்படாமல் பார்வைக்கு முன் வைத்தனர்.ஆனால் குற்றம் சாட்டப்பட்ட டீக்காராமனை முன்னிருத்தவில்லை. 
 இன்னும் விசாரணை இருப்பதாகவும், சட்ட சிக்கல் ஏற்படாமல் இருக்க அவரை இப்போதைக்கு அடையாளப்படுத்த முடியாது என்றும் எஸ்.பி.ராஜேஸ் கண்ணா சொன்னார்.
 "மேலும் தற்போது வெளியாகியுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் டீகாராமனின் படம் பழையது, நகைக்கடையில் சிசிடிவி சரியாக இயங்குகிறதா என்று அவ்வப்பொழுது அவர்கள் சோதிக்கவில்லை.மேலும் கடைக்கு உள் மட்டும் கேமிராக்கள் வைத்துள்ளார்கள். வெளியில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தவில்லை. கொள்ளையன் சம்பவம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னரிலிருந்தே சுவற்றில் தினமும் சிறிது சிறிதாக துளை ஏற்படுத்தியுள்ளான் என்று டிஐஜி பாபு சொன்னார்".
  கொள்ளை நடந்து ஐந்தே நாட்களில் கொள்ளையனை கைது செய்ததோடு, நகைகளையும் பறிமுதல் செய்த போலிசாரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
 "ஏனெனில் இதே வடக்கு காவல் நிலைய எல்லையில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னர் "நாகா ஜூவல்லரிஸ்" என்கிற கடைக்குள் புகுந்த சிலர், அங்கு இருவரையும், சிஎம்சி சிக்னலில் ஒருவரையும் என மூன்று பேரை பட்ட பகலில் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.
 இது தொடர்பாக வழக்கு பதிந்து தேடியலைந்த நிலையில், துப்பாக்கி கொலையாளிகளை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 
 இந்நிலையில் தற்போது காவல் அதிகாரிகளின் துரித நடவடிக்கையினால் பாராட்டுக்கு உட்பட்டிருக்கிறார்கள்.
 இதில் 16 கிலோ நகைகள் மீட்கப்பட்டது. இதனை விரைந்து கண்டுபிடித்த காவல்துறைக்கு பரிசுகள் வழங்கி பாராட்டபடவுள்ளது. இந்த கொள்ளையில் மேலும் யாருக்காவது தொடர்புள்ளதா என விசாரிக்கப்படுகிறது.
 டீக்காராமன் வேறு எங்காவது குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என விசாரணை செய்யப்பட்டுவருகிறது.


   மேற்படி இன்வெஸ்டிகேஷன் டீமில் வேலூர் உட்கோட்ட இணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான், இ.கா.ப. திரு. சுந்தரமூர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வேலூர், திரு.கோவிந்தராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், கடலூர் மாவட்டம் மற்றும் 8 துணை காவல் கண்காணிப்பாளர்களான  திரு.இரவிச்சந்திரன், வேலூர் மதுவிலக்குப்பிரிவு திரு.பூபதிராஜன், மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவு, வேலூர்,  திரு.சரவணன், ஆம்பூர் உட்கோட்டம், திரு. பழனி, காட்பாடி உட்கோட்டம், திரு.விஸ்வேஷ்ரய்யா, வந்தவாசி உட்கோட்டம், திருவண்ணாமலை மாவட்டம்  திரு.குணசேகரன், பொன்னேரி உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.அசோக், செல்வி. விஜயலக்ஷக்ஷ்மி மற்றும் திருமதி.சுவாதி ஆகியோர்கள் தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் தொழில்நுட்ப பிரிவு, தடய அறிவியல், மோப்ப நாய் பிரிவு, கைரேகை பிரிவு மற்றும் காவலர்கள் ஆகியோர் தனிப்படையாக உபயோகப்படுத்தப்பட்டார்கள். 
குறிப்பு:- இந்த கொள்ளை சம்பவத்தை துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டதில் அவர்கள் பாய்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது காவல் உயர் அதிகாரி அவர்களை தொடர்பு கொண்டு, அனைவரும் திரும்பி வந்துடுங்க கொள்ளையனை செக்யூர் பண்ணிவிட்டோம் என்றாராம்.


  மெல்லிய உடல்வாகு, வயது குறைவு கொண்ட சிறார்களை பயன்படுத்தி ஒரு திருட்டு கும்பல் வேலூர் பகுதியில் திருட்டு சம்பவங்களை செய்து வருவதாக தகவல்
   இதே ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை நிறுவப்பட்ட போது, ஒரே வாரத்தில் சிலர் அந்த கடையினுள் புகுந்து கொள்ளையடித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
நன்றி:-மிகுஒளியான்,