காதலியை 35 துண்டாக்கிய காதலனை காட்டிக் கொடுத்த கூகுள் !

ஜார்ஜ்.ரவி,
காதலியை 35 துண்டாக்கிய கொலைகார காதலனை கூகுள் ஹிஸ்டரி காட்டிக் கொடுத்துள்ளது.
இது பற்றின விவரம் வருமாறு,
அப்தாப் அமீன் என்பவர் அவரது காதலி ஷரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி வீசியவர் ஆவார். மும்பையை சேர்ந்த இளம்பெண் ஷரத்தாவை அவரது காதலன் அப்தாப் அமீன் படுகொலை செய்தான்.
ஷரத்தாவை காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் போலீசார் டெல்லி மெக்ராலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், கடந்த 10-ந் தேதி சந்தேகத்தின் பேரில் காதலன் அப்தாப் அமீனை அவரது வீட்டில் பிடித்தனர்.
பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அவன் கொலை செய்தற்கான எந்தவித சலனமும் இன்றி, அமைதியாக ஒன்றும் நடக்காதது போல போலீஸ் நிலையத்தில் இருந்தான். அப்போது போலீஸ் நிலையத்தில் ஷரத்தாவின் தந்தையும் இருந்தார். அவர் அப்தாப் அமீன், தனது மகள் ஷரத்தாவை அடிக்கடி அடித்து, உதைத்து சித்ரவதை செய்ததாக போலீசில் கூறினார்.
இதுபற்றி போலீசார் அப்தாப் அமீனிடம் கேட்டபோது, ஷரத்தாவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறிய அவர், கடந்த மே மாதம் ஷரத்தா வீட்டை விட்டு வெளியேறி விட்டதால், அவர் எங்கு இருக்கிறார் என தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
இருப்பினும் போலீஸ் அதிகாரி ஒருவர் அப்தாப் அமீன் செல்போனை வாங்கி சோதனை நடத்தினார். அப்போது அவர், ஷரத்தாவுடன் சாட் செய்த விவரங்களை அழித்து இருந்தார். மற்றொரு போலீஸ் அதிகாரி அப்தாப் அமீனின் செல்போனை ஆய்வு செய்தார்.
இதில் அவர் செல்போனின் கூகுள் தேடல் விவரங்களை ஆய்வு செய்த போது வழக்கு விசாரணையில் திருப்புமுனை ஏற்பட்டது. உடலை அகற்ற பயன்படும் ரசாயனம், உடலை துண்டு, துண்டாக வெட்டுவது உள்ளிட்ட விவரங்களை அப்தாப் அமீன் கூகுளில் பார்த்து இருந்தார்.
இதுகுறித்து போலீசார் அப்தாப் அமீனிடம் கேட்டபோது அவரால் எதுவும் கூற முடியவில்லை. போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையின் போது தான் அவர், ஷரத்தாவை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசியதை ஒப்புக்கொண்டார்.