காணாமல் போன குழந்தை! 9 ஆண்டுகளுக்கு பின் மாணவியாக பெற்றோரிடம் ஒப்படைப்பு!

ம.பா.கெஜராஜ்,
காணாமல் போன குழந்தையை 9 ஆண்டுகளுக்கு பின்னர் பத்தாம் வகுப்பு மாணவியாக பெற்றோரிடம் ஒப்படைத்தார் ஆட்சியர் - கல்வி விடுதிகளில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இரண்டாம் பரிசை பெற்ற வேலூர் மாவட்டம் பெற்றுள்ள நிலையில் அதற்கான சான்று ஆட்சியரின் பார்வைக்கு முன் வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் திரு.நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் திரு.தனஞ்செயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.85,800 மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அரசு உதவித்தொகை பெற்று வரும் அகவை முதிர்ந்த 12 தமிழறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கான அரசாணையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இரண்டாம் பரிசை பெற்ற வேலூர் ஓட்டேரி, அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதி பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசு கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
பின்னர், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சார்ந்த திரு.குள்ளன் என்கின்ற ஏழுமலை, சின்னபாப்பா என்கின்ற சந்திரா தம்பதியரின் மகள் செல்வி.மல்லி என்கின்ற பிரியா 9 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நல குழுவினர் மீட்டு 10 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர்.
தொடர்ந்து, சிறுமியின் உண்மையான பெற்றோர் இவர்கள் தான் என்பதை மரபணு சோதனை மற்றும் மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி உறுதி செய்து சிறுமி மல்லி என்கின்ற பிரியாவை அவரது பெற்றோரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஒப்படைத்தார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.