திரளான கன்னிப்பெண்கள் கலந்துகொண்ட திருக்கல்யாண வைபவம்!

திரளான கன்னிப்பெண்கள் கலந்துகொண்ட திருக்கல்யாண வைபவம்!

 க.பாலகுரு,

  ஆடிசுவாதியையொட்டி ஸ்ரீசுந்திரமூர்த்தி சுவாமிகள் - ஸ்ரீபரவைநாச்சியார் திருக்கல்யாண வைபவம் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் என போற்றப்படுவதுமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம்.  இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதியாகராஜ சுவாமியை தனது இனிய நண்பராக ஏற்று வழிபட்டவர் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள்.

 சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு திருமணம் செய்வதற்காக திருவாரூரில் உள்ள ஸ்ரீபரவைநாச்சியாரிடம் தூதுபோன ஸ்ரீதியாகராஜ சுவாமி,  ஸ்ரீசுந்தரர் - ஸ்ரீபரவைநாச்சியார் திருக்கல்யாணத்தை ஆடி சுவாதி திருநாளில் நடத்தி வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

அழகு என்ற சொல்லுக்கு இலக்கணமாக திகழ்ந்த ஸ்ரீசுந்தரர்-பரவைநாச்சியார் திருக்கல்யாணத்தையொட்டி திருவாரூர் புதுத்தெரு நாலுகால் மண்படத்திலிருந்து மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி காலை நடைபெற்றது.

 இதனை தொடர்ந்து ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் தட்டுசித்தி மண்டபத்தில் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் - ஸ்ரீபரவைநாச்சியார் திருக்கல்யாணம் ஊஞ்சல் வைபத்துடன் தொடங்கியது.

  திருக்கல்யாணத்தையொட்டி சாஸ்திர சம்பிரதாய முறைப்படி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாலை மாற்றப்பட்டு திருமாங்கல்யதாரணம் செய்விக்கப்பட்டு ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள்-ஸ்ரீபரவைநாச்சியார் திருக்கல்யாணம் நடைபெற்றது.

  இத்திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.  குறிப்பாக இறைவனுக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை கண்டுகளித்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்ற சாஸ்திர ஜதீகத்தின்படி திரளான கன்னிப்பெண்கள் கலந்துகொண்டனர்.