விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு மெமோ! ஆட்சியர் உத்தரவு!

ஜி.கே.சேகரன்,
மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்ற போது அதில் சில துறை அதிகாரிகள் வரவில்லை. இதை கவனித்த ஆட்சியர், வரும் காலங்களில் வருகை பதிவேட்டை பயன்படுத்த வேண்டும், அதே போல் இது போன்ற கூட்டங்களுக்கு இனி அதிகாரிகள் வரவில்லை என்றால் மெமோ வழங்கப்படும் என்று கடுமையாக சொன்னார்.
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டமானது நடந்தது. இதில் வேலூர், காட்பாடி, கேவிக்குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
அப்போது விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு குறைகளை கூறி அதனை சரி செய்ய வேண்டுமென கூறினார்கள். குறிப்பாக இக்கூட்டத்தில் ஏரிகளை தூர்வார வேண்டும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தடுப்பணைகளை கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.
அப்போது ஆட்சியர் சுப்புலெட்சுமி துறை சார்ந்த அதிகாரிகள் பதிலளிக்க வேண்டுமென கூறினார். ஆனால் மின்சாரம், நீர்வளம், போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல துறைகளின் உயரதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.
பல முறை ஆட்சியர் பதிலளிக்க கோரியும், அந்தக் கூட்டத்தில் பதிலளிக்க எவரும் இல்லை. சம்மந்தப்பட்ட எவரும் இக்கூட்டத்தில் பங்கேற்காததை அறிந்து ஆட்சியர் உடனடியாக சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதில் வசாயிகள் குறை தீர்வு கூட்டம் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று. அதிகாரிகள் பங்கேற்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியும், பலதுறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இனி வரும் காலங்களில் கட்டாயம் அதிகாரிகள் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
அதிகாரிகள் இனி வரும் காலங்களில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் அதிகாரிகள் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள வருகை பதிவேட்டை பயன்படுத்தி பதிவுகளை பராமரிக்க வேண்டும். இனி வராத அதிகாரிகளுக்கு மெமோ அளியுங்கள் என பேசினார்.
இந்த உத்தரவை கேட்ட அங்கிருந்த அதிகாரிகள் உடனே செல்போன்களை எடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரகசியமாக இந்த தகவலை கொடுத்தனர்.