குழந்தை கடத்தல் என வதந்தி பரப்பவேண்டாம்! காவல் துறை எச்சரிக்கை!

கு.அசோக்,
வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வந்து குழந்தைகளை கடத்தி செல்வதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வருகிறது. இதனால் சந்தேகப்படும்படி நபர்கள் சுற்றி திரிந்தால் அவர்களை பொதுமக்கள் தாக்கும் சம்பவங்களும் தமிழகத்தில் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது..
இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளை கடத்தும் கும்பல் புகுந்துள்ளதாக தகவல் பரவியது.
இது தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் வதந்திகளை நம்ப வேண்டாம் என பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வாலாஜாப்பேட்டை காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையிலான போலீசார் குழு பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களுக்கு ஒலிபெருக்கியின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்..
அப்போது அவர் பேசுகையில் குழந்தை கடத்தல் தொடர்பான பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் அதேபோன்று வீண் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் சந்தேகப்படும்படி நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.