பாலாற்றில் பரபரப்பு!  மயான கொள்ளை விழாவில் தேர் கவிழ்ந்ததற்கு பரிகார பூஜை!

ஜி.கே.சேகரன்,

  மயான கொள்ளை தினத்தன்று, விருதம்பட்டு, மோட்டூர் காலணியில் உள்ள, வெண்மணி நகர்¢ தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதற்கு  இன்று பரிகார பூஜை நடைபெற்றது.

  வேலூர் மாவட்டத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது மயான கொள்ளை திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. அப்போது, தோட்டப்பாளையம், காகிதப்பட்டறை, மக்கான், ஓல்டு டவுன் என பல பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வந்து அம்மன் ஆற்றில் இறங்கியது.

  மேலும், விருதம்பட்டு, கழிஞ்சூர், வெண்மணிநகர் மோட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 60 அடி கொண்ட தேரானது  பிரமாண்டமாக ஊர்வலமாக வந்து பாலாற்றங்கரையில் நிற்கவைக்கப்பட்டது. அன்று இரவு வெண்மணி நகர் மோட்டூரில் 60 அடி உயரம் கொண்ட தேர் திடீரென சாய்ந்து விழுந்து தரைமட்டமானது. இதில் தேர் விழும் திசையில் யாரும் இல்லாததால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், ஒருவருக்கு மட்டும் சிறு காயம் ஏற்பட்டது.

   இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதனை அடுத்து இன்று வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் காட்பாடி வெண்மணி நகர் மோட்டூர் பொதுமக்கள் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கரகம் வைத்து பரிகார பூஜை நடத்தினர்.

 இதில் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் படையல் இட்டு கூழ் வார்த்தனர். பின்னர் பம்பை மேளம் முழங்க சாமி வழிபாடு செய்த போது, அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்கள் மீது இறங்கி தனக்கு நீங்கள் இட்டப்படையில் போதவில்லை என கூறியது.

  இதனையடுத்த அப்பகுதி மக்கள் தாங்கள் இதற்கு மேல் அம்மனை சாந்தப்படுத்துகிறோம் எனக் கூறிய கோழி பலியீட்டு கற்பூரம் ஏற்றி தீபாரதனை செய்து அம்மனை சாந்தப்படுத்தினர். அதன்  பிறகு கரகத்தை பம்பை மேளம் முழங்க வெண்மணி நகர் மோட்டோருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பால் தயிர் மற்றும் பல்வேறு அபிஷேகங்களை செய்து வழங்கினர்.