வச்சு செய்யும் திருப்பத்தூர் கலெக்டர்! ஒரு வாரத்துக்கு தமிழ் மட்டும் தான்!

வச்சு செய்யும் திருப்பத்தூர் கலெக்டர்! ஒரு வாரத்துக்கு தமிழ் மட்டும் தான்!

  ஆர்.ரமேஷ்,  

 தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிச் சட்டவாரம் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

  அதனைத் தொடர்ந்து மாவட்டங்களில் ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்விகளை ஒருவார காலம் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.

   இவ்வாணைக்கிணங்க திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளினை நினைவு கூரும் வகையில் ஒரு வார காலத்திற்கு (14.03.2023, 15.03.2023, 16.03.2023, 17.03.2023, 18.03.2023, 20.03.2023 மற்றும் 21.03.2023 முடிய) கொண்டாடப்படவுள்ளது.

 முதல் நாள் 14.03.2023 செவ்வாய்க்கிழமையன்று அரசு அலுவலர், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சிமொழித் தொடர்பான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பெறவுள்ளது. பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைக்க உள்ளார்.

     இரண்டாம் நாள் (15.03.2023) பிற்பகல் 2.30 மணி முதல் 5.00 மணிவரை அரசுப் பணியாளர்களுக்கு கணினித் தமிழில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்ளைக் கொண்டு கணினித் தமிழ், ஒருங்குறிப் பயன்பாடு குறித்து பயிற்சியும், மூன்றாம் நாள் (16.03.2023) பிற்பகல் 2.30 மணி முதல் 5.00 மணிவரை அரசுப் பணியாளர்களுக்கு மின்காட்சியுரையின் மூலம் ஆட்சிமொழிச் சட்டம்ஃவரலாறு, அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி மற்றும் மொழி பெயர்ப்பும் கலைச் சொல்லாக்கமும் ஆகிய தலைப்புகளிலும்,

  நான்காம் நாள் (17.03.2023) பிற்பகல் 2.30 மணி முதல் 5.00 மணி வரை அரசுப் பணியாளர்களுக்கு சுற்றோட்டக் குறிப்புகள், செயல்முறை ஆணைகள், அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகைகள் அமைத்தல், குறிப்பாணை ஆகிய தலைப்புகளிலும் துறைசார் வல்லுநர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பெறவுள்ளன.

  ஐந்தாம் நாள் (18.03.2023) வணிக நிறுவன பெயர்ப்பலகைகள் 5 : 3 : 2 என்ற விகிதத்தின் அடிப்படையில் (தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள்) அமைத்திட வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளைச் அழைத்து தொழிலாளர் துறை உதவி ஆணையர் தலைமையில் கூட்டம் நடத்தப்பெற உள்ளது.

  ஆறாம் நாள் (20.03.2023) ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் வாணியம்பாடி, இசுலாமியாக் கல்லூரியில் நடத்தப்பெறவுள்ளது.

  ஏழாம் நாள் (21.03.2023) பொது மக்கள் ஆட்சிமொழிச் சட்டம் மற்றும் திட்டச் செயலாக்கத்தை அறிந்துகொள்ளும் வகையில் மாவட்டத்தின் பிறபகுதிகளில் விளம்பரப் பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடத்தப்பெறவுள்ளது.

   ஒருவாரகால நிகழ்வுகள் அனைத்தும் திருப்பத்தூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரால் ஒருங்கிணைத்து நடத்தப்பெறவுள்ளது.

  இந்த ஒருவார கால ஆட்சிமொழிச் சட்டவார கொண்டாட்டத்தில் பொது மக்களும் தமிழறிஞர்களும் தமிழ் அமைப்பினரும் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் பெருமளவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்.இ.ஆ.ப., அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.