விதைத்த நெல்லை காப்பாற்ற விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம்!

க.பாலகுரு,
குருவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக அரசே தண்ணீர் திறந்து வைத்தது. இதனை நம்பி திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குருவை சாகுபடி பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது போதிய தண்ணீர் இல்லாததால் முளைத்த பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் குருவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வழங்கிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றிய குழு சார்பில் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் தலைமையில் திருவாரூர் ஒன்றிய குழு கூட்டமானது நடைபெற்றது. இதில் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலையில் வகித்தார் கூட்டத்தில் ஒன்றிய குழு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் குருவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக நேரடி நெல் விதைப்பில் விதைக்கப்பட்டு இருந்த நெல் நாற்றுகள் கருகும் நிலையில் உள்ளதால் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வருகின்ற (26 ஜூலை) அன்று மாவூர் கடைத்தெரு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கத்தின் சார்பில் குருவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரைத் திறந்து கருகும் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஒன்றிய குழு கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.கோமதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பவுன்ராஜ், மாதவன், சுந்தரையா, சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.