பாஜக என்ற சுத்தி தமிழர்களின் இதயத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது! கதை சொன்ன அமைச்சர் உதயநிதி!

என்.வி.முருகன்,
சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று திருவள்ளூரில் நடைபெற்றது. வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் தனது உரையை அமைச்சர் உதயநிதி மூலமாக முதல்வர் ஸ்டாலின் வாசிக்க வைத்தார்.
அப்போது தனது பேச்சை ஒரு குட்டிக் கதையுடன் தொடங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஒரு சாவி, ஒரு பூட்டு, ஒரு சுத்தியல் இருக்கு. பூட்டு பூட்டப்பட்டிருக்கிறது. இந்த சுத்தியல் வந்து எப்படியாவது இந்த பூட்டை திறக்கணும்னு எவ்வளவோ முயற்சி செய்யுது. பூட்டு தலை மேலேயே பலமாக அடிக்குது. ஆனால் எவ்வளோ அடிச்சும் பூட்டு திறக்கவே இல்ல. அப்போ இதை பார்த்துக் கொண்டிருந்த சாவி, டக்குனு பூட்டு ஓட்டை வழியாக உள்ளே போய் ஈஸியா தொறந்துருச்சு.
அப்போ அந்த சாவியை பார்த்து சுத்தியல் கேட்டுச்சு. நான் உன்னை விட பலசாலி, வலிமை வாய்ந்தவன். ஆனால் என்னாலேயே இந்த பூட்டை திறக்க முடியலியே. நீ எப்படி திறந்தனு கேட்ருக்கு. அதுக்கு சாவி சொல்லிச்சாம். நீ என்னை விட பலசாலி தான். என்னை விட நீ பெரிய ஆளு தான். ஆனால், நீ பூட்டை திறக்குறதுக்கு பூட்டோட தலையில அடிக்கிற.
ஆனால், நான் பூட்டோட இதயத்தை சென்று தொடுகின்றேன். அதனால்தான் என்னால் பூட்டை இவ்வளவு சுலபமாக திறக்க முடிந்ததுனு சாவி சொல்லிருக்கு. இங்க நான் பூட்டுனு சொன்னது தமிழ்நாட்டை. சுத்தியல்னு சொன்னது ஒன்றிய பாஜக அரசை. சாவினு சொன்னது நம்ம கழகத்தை. பாஜக என்ற சுத்தியல் எவ்வளவு வாட்டி ஓங்கி ஓங்கி அடிச்சாலும், தமிழர்களின் இதயத்தை அதால தொட்டுக்கூட பார்க்க முடியாது.
தமிழ்நாட்டின் இதயத்தை தொடக்கூடிய திராவிட இயக்கக் கொள்கைகள் எனும் சாவியை தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞரும் நம்ம தலைவர்கிட்ட கொடுத்துட்டு போயிருக்காங்க. எப்படி 2021-ல் ஒட்டுமொத்த அடிமைகளையும் தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடித்து நம்ம தலைவர் ஆட்சி அமைத்தாரோ, அதேபோல, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளையும், அவர்களின் முதலாளிகளையும் நாம் அடித்து விரட்ட வேண்டும் என பேசினார்.
"இந்த நிகழ்ச்சியில் திடீரென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திமுக செயலாளரை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மீண்டும் கைபேசி மூலமாக அவரிடம் முதல்வரை பேச வைத்தார்".