முதல்வர் பந்து வீசினா யாராலும் அடிக்கமுடியாது:- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்யம்!

ம.பா.கெஜராஜ்,
முதல்வர் பந்து வீசினா யாராலும் அடிக்கமுடியாது, இங்க எப்படி சிக்சர் அடிக்கிறாரோ அதுபோலதான் பவுலிங்கிலேயும் சிறப்பாக செயல்படுவார் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்
சட்டமன்றத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் குள வளாகம் உள்ளிட்டவை ரூ.25 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில்ரூ.90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாகங்கள் நிறுவப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் 10 கோடி செலவில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும்.
சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நவீன எல்இடி மின்விளக்கு வசதிகள் ஒன்பது கோடியே 90 லட்சம் செலவில் புனரமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்ட்டார்.
தொடர்ந்து அவர் பேசும் போது, நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரோட இல்லத்தில் தான். எனது தந்தை முதல்வர் முக ஸ்டாலின் மேயர் ஆனதும் வேளச்சேரிக்கு சென்று விட்டோம்.
நான் சிறு வயதாக இருக்கும் போது கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் நானும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவோம்.
கலைஞருடனும் கிரிக்கெட் விளையாடிருக்கிறேன். வருவாங்க பந்து வீசிட்டு பேட் செய்து விட்டு போயிருவாங்க. கலைஞர் மட்டுமின்றி தற்போதைய முதல்வர் அவர்களுடனும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்.
முதல்வர் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னர். அவர் பந்து வீசினா யாராலும் அடிக்கமுடியாது. இங்க எப்படி சிக்சர் அடிக்கிறாரோ அதுபோலதான் பவுலிங்கிலேயும் சிறப்பாக செயல்படுவார் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.