ஜீ ஸ்கொயர் நிறுவனத்துக்கு அண்ணாமலை சொல்லியது போல் 8 நாளில் அனுமதி வழங்கவில்லை! அமைச்சர் விளக்கம்!!

ஜீ ஸ்கொயர் நிறுவனத்துக்கு அண்ணாமலை சொல்லியது போல் 8 நாளில் அனுமதி வழங்கவில்லை! அமைச்சர் விளக்கம்!!

ம.பா.கெஜராஜ்,

   பா.ஜ.கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை ஜீ ஸ்கொயர் நிறுவனத்தை மையப்படுத்தி குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினார் அல்லவா? இந்நிலையில் அதற்கான விரிவான விளக்கத்தை வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி அளித்துள்ளார். இது பற்றின விவரம் வருமாறு,

 ஜீ ஸ்கொயர் என்கிற நிறுவனத்துக்கு கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கோவையில் 122 ஏக்கருக்கான அனைத்து ஒப்புதல்களையும் அந்த நிறுவனம் 8 நாட்களில் பெற்றுள்ளது என்றும் அண்ணாமலை பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

 மேலும், சி.எம்.டி.ஏ. செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தார்.

   இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார்.

   அப்போது அவர் தெரிவித்ததாவது, சி.எம்.டி.ஏ.வில் கட்டிட பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் ஒற்றை சாளர முறையில் விரைந்து நிறைவேற்றுமாறு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

  அதன் அடிப்படையில் முதலில் சோதனை முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஏப்ரல் 1 முதல் 30-ந் தேதி வரை ஒற்றை சாளர முறையில் அந்த பணிகள் சோதனைக்காக நடத்தப்பட்டது. மே 5-ந்தேதி முதல் 9-ந்தேதி அதை நிறுத்திவிட்டு 10-ந்தேதி முதல் அந்த பணிகள் ஆன்லைனில் கொண்டு வரப்பட்டது.

   கடந்த 27 நாட்களில் 92 மனுக்கள் அனுமதி கேட்டு சி.எம்.டி.ஏ.வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆன்லைனில் விண்ணப்பிப்பது 10-ந்தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

  சி.எம்.டி.ஏ.வில் பொதுமக்களின் கால விரயத்தை தவிர்க்கவும், மனுதாரர்களின் அலைச்சலை தவிர்க்கவும் பணிகளை விரைந்து முடிக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  இதற்கு முன்பு அடுக்குமாடி கட்டிட அனுமதிக்கு அமைச்சர் கையெழுத்து போட வேண்டும். இந்த நடைமுறையை மாற்றி இனிமேல் நேரடியாக சி.எம்.டி.ஏ. அலுவலகத்திலேயே அதிகாரிகள் அனுமதி வழங்கும் வகையில் அதிகாரம் வழங்கி உள்ளோம்.

   கிராம பகுதிகளில் உள்ள நிலமாக இருந்தால் 5 ஏக்கர் என்று இருந்ததை 10 ஏக்கராக அனுமதித்து உயர்த்தி உள்ளோம். அதையும் அந்த மாவட்டத்திலேயே செய்து கொள்ளலாம். அதேபோல் நகராட்சி பகுதிகளில் 2 ஏக்கர் என்பதை 5 ஏக்கராக உயர்த்தி கொடுத்துள்ளோம்.

   கட்டிட அனுமதிக்கு மாவட்ட அளவில் 15 ஆயிரம் சதுர அடிக்கு மட்டும் கொடுக்க முடியும். இப்போது அதை 40 ஆயிரம் சதுர அடியாக உயர்த்தி உள்ளோம். ஒரு தனிநபர் கட்டிடம் கட்டும் போது கூட பல்வேறு பிரச்சினை ஏற்படுவது உண்டு. அதற்கு தீர்வுகாண சி.எம்.டி.ஏ.வில் பணிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

  மக்களின் வசதிக்காக கோவை, ஓசூர், திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், பகுதிகளிலும் சி.எம்.டி.ஏ. வர உள்ளது. சென்னை சி.எம்.டி.ஏ.வில் காலி பணியிடங்கள் நிறைய உள்ளது. இதனால் அதிக பணிச்சுமை உள்ளது. 37 சதவீதம் காலியிடங்கள் இருக்கிறது. இந்த காலியிடங்கள் ஒரு வருடத்தில் ஏற்பட்டதல்ல.

  தற்போதுள்ள ஊழியர்களை வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. காலி இடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

   தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கூறும்போது, 'சி.எம்.டி.ஏ.வில் புதிதாக சி.இ.ஓ. பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தவறான பார்வையாகும்.

 சி.எம்.டி.ஏ.வில் 1978-ல் இருந்து சி.இ.ஓ. பதவி உள்ளது. இதுவரை அந்த பதவியில் 45 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்றி உள்ளனர். இப்போது 46-வது ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்த பதவியில் உள்ளார். இந்த பதவி அவசியமானது.  அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2 ஆண்டாக சி.இ.ஓ. பணி நிரப்பப்படவில்லை.

  கே:-கோவையில் ஜீ ஸ்கொயர் நிறுவனத்துக்கு 122 ஏக்கர் நிலத்துக்கான அனைத்து ஒப்புதலையும் அந்த நிறுவனத்துக்கு 8 நாட்களில் சி.எம்.டி.ஏ. வழங்கி உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்து இருக்கிறாரே? அமைச்சர் அமைச்சர் முத்துசாமி:- பிளான் அனுமதி என்பது 3 விதமாக உள்ளது. நில வகைப்பாடு மாற்றம், லே அவுட், கட்டிட அனுமதி. இதில் கோவையில் 122 ஏக்கருக்கான ஒப்புதலுக்கு சிவமாணிக்கம் என்பவர் 12.12.2019-அன்று சி.எம்.டி.ஏ.வில் விண்ணப்பம் செய்துள்ளார். அவருக்கு 28.1.2021 அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

   இது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது. இதைத்தான் அண்ணாமலை, நாங்கள் அனுமதி கொடுத்தது போல் பேசுகிறார்.

   சி.எம்.டி.ஏ.வில் அனுமதி கேட்டு சிவமாணிக்கம் பெயரில் தான் விண்ணப்பம் வந்துள்ளது. ஜீ ஸ்கொயர் நேரடியாக விண்ணப்பிக்கவில்லை.

   இதைத்தான் ஜீ ஸ்கொயருடன் சம்பந்தப்படுத்தி அவர் பேசி உள்ளார். நிலம் அனுமதிக்கு பிறகு கூட ஜீ ஸ்கொயர் அதை வாங்கி இருக்கலாம். அதே மனை பிரிவுக்கு இவர்கள் 12.12.2019-ல் மற்றொரு விண்ணப்பம் செய்ததின் பேரில் 30.3.2021-ல் டி.சி.டி.பி. அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜீ ஸ்கொயர் நிறுவனத்துக்கு அவர் சொல்லியது போல் 8 நாளில் அனுமதி கொடுக்கப்படவில்லை.

   குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே அண்ணாமலை சொல்லி இருப்பது முழுக்க முழுக்க தவறு. என்று அமைச்சர் அவரது பேட்டியில் சொன்னார்.