கே.பி.முனுசாமி வசூலிஸ்ட்! ஓ.பி.எஸ்.டீமை சேர்ந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மிரட்டல்!

ம.பா.கெஜராஜ்,
கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் , அவர் கட்டிங் கேட்ட வீடியோவை வெளியிடுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மிரட்டியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஈரோடு இடைத்தேர்தல் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மேற்படி இருவரும் கட்சி தலைமைக்காக சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். தேர்தல் முடியும்வரை இரு தரப்பினரும் அமைதியாக இருப்பார்கள் என்று தொண்டர்கள் நினைத்தனர்.
ஆனால் இரு தரப்பினரும் தொடர்ந்து லடாய் செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு தொகுதியில் பிரசாரம் செய்வது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கே.பி.முனுசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை சாதாரண தொண்டன் போன்று அவரால் உண்மையாக உழைக்க முடியுமா? என விமர்சித்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள கே.பி.முனுசாமி மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியதுடன், அவர் தொடர்பான ஒரு ஆடியோவை வெளியிட்டார்.
அதில், கே.பி.முனுசாமியிடம், ரூ.50 லட்சம் இப்போது ரெடி, 50 லட்சம் பின்னர் தருகிறேன் என கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.
இதுபற்றி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமி என்னிடம் 1 கோடி ரூபாய் கேட்டார். பணம் கொடுப்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டாம் என்று கே.பி.முனுசாமி கூறினார்.
என்னைப்போல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். ஓபிஎஸ் அண்ணனை தரம் தாழ்ந்து பேசுவதால் அவர் பேசிய ஆடியோவை தற்போது வெளியிடுகிறேன் என்ற அவர், கே.பி.முனுசாமி அமைதியாக இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவன்.
முனிசாமி பணம் சம்பாதிப்பதற்காகவே எடப்பாடி அணியில் இருக்கிறார்.
கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம்தான். நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கு அவர் பணம் கேட்கிறார். தொண்டர்களிடமும் பணம் வசூலித்து வருகிறார் என்று ஆதாரங்கள் உள்ளது என்று சொல்லி பேசினார்.