வெறி நோய் தடுப்பு முகாம்! ஆட்சியர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்!

க.பாலகுரு,
திருவாரூர் தண்டலை கிராமத்தில் வெறி நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்கள்.
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தண்டலை கிராமத்தில், வெறி நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமில் கிடேரிக் கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் வராமல் தடுக்க 4 முதல் 8 மாத வயதுடைய கிடேரிக் கன்றுகளுக்கு புருஸெல்லோஸிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 9400 கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
46 கிடேரிக்கன்றுக்கு புருஸெல்லோஸிஸ் தடுப்பூசியும், 62 நாய்களுக்கு வெறிநோய்த்தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட விழிப்புணர்வுப்பயிற்சியில் தண்டலை ஊராட்சி நடுநிலைப்பள்ளியைச் சார்ந்த 50 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் மூலம் சினைபிடிக்காத மாடுகளுக்கு மலடுநீக்க சிகிச்சைப்பணிகளும், தாது உப்புக்கலவைகளும், கன்றுகளுக்கான தாது உப்புக்கட்டியும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்ப்போர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
இம்முகாமில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எம்.ஹமீது அலி, தண்டலை ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.