சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்தால் விபத்து இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்க முடியும் - ஆட்சியர்  செந்தில்ராஜ்!

சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்தால் விபத்து இல்லாத  தமிழ்நாட்டினை உருவாக்க முடியும் - ஆட்சியர்  செந்தில்ராஜ்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

   தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வார இறுதி நாள் விழாவையொட்டி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் முன்னிலையில் துவக்கி வைத்து தெரிவித்ததாவது: 

    மருத்துவருக்கு அடுத்தபடியாக மக்கள் ஓட்டுநர்களைதான் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். எனவே அவர்களின் நலன் கருதி இன்று மருத்துவ முகாம் நடைபெறுகிறது. சாலை பாதுகாப்பிற்காக அரசு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.  

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்னுயிர் காப்போம் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

   இத்திட்டத்தின் மூலம் விபத்துக்குள்ளானவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்குள் இலவசமாக அவசர சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விபத்தினால் ஏற்படும் மரணங்களை தவிர்க்கலாம்.

   தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு 324 விபத்து மரணங்களும், 2021ம் ஆண்டு 394 விபத்து மரணங்களும், 2022ம் ஆண்டு 373 விபத்து மரணங்களும் ஏற்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்தால் விபத்து இல்லாத தமிழ்நாட்டினை உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்

தெரிவித்தார்.

 தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெ.ஜெகன் தெரிவித்ததாவது:

            வாகன ஓட்டுநர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பயணிகளுக்கு பாதுகாப்பு இருக்கும். பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. பள்ளிகளில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

   லாரி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். தூத்துக்குடியில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏராளமான இடவசதிகள் உள்ளது. சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கி தமிழ்நாட்டினை விபத்து இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

            நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.பொற்செல்வன், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகளின் நேர்முகஉதவியாளர் பிரைட்டன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களான யங் இந்தியன் மற்றறும் எம்பவர் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அரசு போக்குவரத்து பணிமனை ஓட்டுநர்கள், ஓட்டுநர் பயிற்சி மைய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி.