மனைவிக்கு சிலை அமைத்து மரியாதை செய்த கணவர்!

மனைவிக்கு சிலை அமைத்து மரியாதை செய்த கணவர்!

  கு.அசோக்,

 இறந்த மனைவிக்கு சிலை அமைத்து முதலாம் ஆண்டு நினைவு தினத்தை கடைபிடித்துள்ளார் ஒரு அற்புத கணவர்.

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஆதியூர் பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ் (57).இவருக்கு 1985 ஆம் வருடம் மலர்க்கொடி என்பவருடன் திருமணமாகி மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

 இவர்கள் அனைவரும் பெங்களூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி மலர்க்கொடி உயிரிழந்துள்ளார். சுமார் 35 வருடங்கள் உடன் வாழ்ந்த மனைவியை பிரிந்த கோவிந்தராஜ் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

 இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மைசூர் பகுதியில் ஒரு மனைவியை பிரிந்த ஒரு நபர் தன்னுடைய மனைவிக்கு ஊஞ்சலில் சிலை வைத்து அழகுப் பார்த்ததை கண்ட கோவிந்தராஜ் தன்னுடைய மனைவிக்கும் அதே போல் ஒரு சிலையை அமைக்க முடிவெடுத்தார். பல இடங்களில் தேடி திரிந்து அலைந்து மனைவியைப் போலவே தத்ரூபமாக ஒரு சிலையை வடிவமைத்து மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அதை நிறுவி சாந்தமடைந்தார்.