மாணவர் விடுதியில் தரமற்ற உணவு! தர்ணா!!

Bala.Jothi
மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி தர்ணா நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அரசு மன்னர் கலைக்கல்லூரியும், அதன் அருகிலேயே ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியும் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏராளமான வெளியூர் மற்றும் அக்கம்பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து காலை உணவை புறக்கணித்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் இருந்து சாப்பாட்டு தட்டுகளுடன் விடுதியை விட்டு வெளியே வந்தனர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அரசு மன்னர் கலைக்கல்லூரி ஆதி திராவிடர் அரசு மாணவர் நல விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.
இங்கு தங்கும் மாணவர்களுக்காக அரசு வழங்கக்கூடிய எந்த ஒரு சலுகையும் இதுவரை வழங்கப்படவில்லை. கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. உணவு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் கூறியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
பின்னர் ஆடி அசைந்த வந்த போலீசார் மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இது தொடர்பாக மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகப்படுத்தினர்.