இறங்குவதற்கு முன் பிகில் அடித்த கண்டக்டர்! அவசர புத்தி அரசு ஓட்டுநர்! முதியவர் படுகாயம்!

  ஜி.கே.சேகரன்,

 மாதனூரில் அரசு விரைவு பேருந்தில் இருந்து இறங்க முயன்ற கூலி தொழிலாளி ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் அலட்சியத்தால் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் பட்டுவாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (62) இவர் தனது மனைவி மல்லிகாவை மாதனூர் பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி செல்வதற்காக அழைத்து வந்த போது வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் அரசு பேருந்து மாதனூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றது.

   அப்போது தனது மனைவியை ஏற்றிவிட்டு, பின்னாடியே அரிசி மூட்டையை ஏற்றி விட்டு  பேருந்தில் இருந்து  கீழே இறங்க முயன்றார். அதற்குள் பேருந்தை இயக்கியதால் கூலித் தொழிலாளி குமாரசாமி பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.

  உடனே அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவரை மீட்டு மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  மேலும் விபத்து நடந்ததை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அரசு பேருந்தை  நிறுத்தி சம்பவம் குறித்து தட்டி கேட்டபோது பணிமனையில் இருந்து வருவார்கள் என அலட்சியமாக நடத்துனர் பதில் அளித்து விட்டு சென்ற போது இளைஞர்களுக்கும் நடத்துனருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

  ஆம்பூர் அருகே பேருந்தில் இருந்து இறங்க முயன்ற கூலி தொழிலாளி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பவரை கண்டுகொள்ளாமல் செல்லும் அரசு போக்குவரத்து ஊழியர் மீது துறை ரீதியாகவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.