போதை பயணியை பிடித்து தள்ளிய கண்டக்டர் சஸ்பெண்டு!

 தி.பாண்டி,

 தமிழக அரசு பேருந்து  பெங்களூருவில் இருந்து வந்தவசிக்கு  கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தது. அங்கு பழைய பேருந்து நிலையம் முன்பு பேருந்து நிறுத்தப்பட்டது.

 அப்போது பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால்  டாஸ்மாக் போதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் இறங்காமல் இருந்தார். கண்டக்டர் பிரகாஷ் அவரை சிரமப்பட்டு இறக்க முயன்றார்.

 ஆனால் அவர் இறங்காமல் பஸ் படிக்கட்டில் தள்ளாடியபடி நின்றார். அப்போது கண்டக்டர் பிரகாஷ் பயணியை பிடித்து பஸ்சில் இருந்து கீழே தள்ளினார்.

  அதில் அந்த வாலிபர் சாலையில் விழுந்தார். இந்த காட்சிகளை அங்கிருந்த சமூக ஆர்வலர் படம் பிடித்தார். அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 இது குறித்து வந்தவாசி டெப்போ உதவி பொறியாளர் துரையின் பார்வைக்கு சென்றது, அது பற்றி அவர் கூறுகையில், அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார்.

  மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மழுப்பினார்.

   அப்படியிருக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட அதிகாரி விசாரணை மேற்கொண்டு, பஸ்சில் இருந்து பயணியை வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிட்டதற்காக கண்டக்டர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

 போதை ஆசாமி பற்றி விவரம் என்னவென்று வெளியாகவில்லை.