குவார்ட்டர் பாட்டிலில் மீட்டர் போடும் டாஸ்மாக் ஊழியர்கள்! முதலமைச்சரின் தனிப்பிரிவு புகாருக்கு பொய் தகவலளிக்கும் மேலாளர்!

ம.பா.கெஜராஜ்,
நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டது தான் முதலமைச்சரின் தனிப்பிரிவு இணைய புகார் வசதி.
இந்த வசதி அறிமுகப்பட்ட போது தடபுடலாக பணியாற்றுவதைப்போல பாவ்லா காட்டிய அதிகாரிகளில் பலர் தற்போது இதையும் வழக்கம் போலவே மந்தமாக்கிவிட்டனர்.
அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது ஒரு இளம் வழக்கறிஞரின் புகார் மனு.
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம், வேலூர் அருகே உள்ள மோட்டூர் என்கிற பகுதியில் அரசு மதுபானக்கடை (டாஸ்மாக்) செயல்பட்டு வருகிறது. அந்தக் கடையில் அன்பூன்டி கிராமத்தைச் சேர்ந்த சில உழைப்பாளிகள் மாலை நேரத்தில் மது வாங்கி அருந்துவர்.
குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடையில் குவார்ட்டர் மதுவுக்கு அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டாய வசூல் செய்கிறார்கள் என்பது வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் வருத்தம்.
எனவே இது குறித்து, அதே ஊரைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் நவின்ராஜ் என்பவரை அனுகி தங்கள் குறைகளை கொட்டியிருக்கிறார்கள் அந்த மது பிரியர்கள்.
அவர்கள் சொல்வதை உறுதிப்படுத்திக்கொண்ட வழக்கறிஞர் நவின் ராஜ் கடந்த 31.08.2024 ஆம் தேதியன்று முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையம் வழியாக புகார் மனு அனுப்பிவைத்தார். அவரது புகார் பதிவும் செய்யப்பட்டது.
பின்னர் புகார்தாரரான வழக்கறிஞர் நவின் ராஜிக்கு டாஸ்மாக் நிர்வாகத்திடமிருந்து 12.09.2024 ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை மாவட்ட மேலாளர் (பொறுப்பு) செங்கிஸ்கான் என்பவர் அனுப்பியிருந்தார்.
அதில் மேற்படி மதுபான கடை எண்: 11262 -ல் மதுபானங்கள் குறிப்பிட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யபட்டதில் மதுபானங்கள் ஏதும் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதில்லை என கண்டறியப்பட்டும், வாடிக்கையாளர்களுக்கு பில் ரசீது அளிக்க வேண்டும் எனவும் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களுக்குஅறிவுறுத்தப்பட்டது.
மேலும் கடையில் பெயர் பலகை வைக்கப்பட்டத்தின் புகைப்பட நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இனிவரும் வரும் காலங்களில் இதுபோன்ற புகார் வராவண்ணம் பணி செய்திட மேற்பார்வையாளர்களுக்கும் மற்றும் விற்பனையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
எனவே மனுதாரர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என தெரிவித்திருந்தார்.
இது குறித்து வழக்கறிஞர் நவின் ராஜ் தெரிவிக்கையில், மேற்படியான டாஸ்மாக் கடையில் பெயர் பலகை இருக்கிறது. ஆனால் அதில் கடை எண் கிடையாது. இது குறித்து மாவட்ட மேலாளர் அலுவலகத்துக்கு புகார் சொன்ன போது, போர்டில் இருக்கும் பாருங்கள் என்கிறார்கள். ஆனால் போர்டில் எண் இல்லை.
இது குறித்து சம்மந்தப்பட்ட கடையில் உள்ளவர்களிடம் கேட்டால் ஆபாசமாக திட்டுவதுடன், போய் மேலாளரை கேளுங்கள் என்று பலரிடம் சொல்லி அனுப்புகிறார்.
இவற்றையெல்லாம் அறிந்த பின்னரே முதல்வர் தனிப்பிரிவு இணையத்தில் புகார் மனு அனுப்பினேன். பின்னர் அதற்காக எனக்கு மேலாளர் அனுப்பிய பதிலில் மதுபானங்களுக்கு கூடுதல் பணம் வசூல் செய்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அவரது கடிதம் கிடைத்த அன்றைய தினமே எங்கள் ஊரைச் சேர்ந்த சில மதுபிரியர்கள் அதே கடையில் மதுபானம் வாங்கிய போது ஜிபே மூலம் பணம் செலுத்தினார். பின்னர் அவரிடம் ரூ.5/ ஐ கேட்டு பெற்றார் அங்கிருந்த விற்பனையாளர்.
ஆக மேலாளர் நேரடியாக ஆய்வை செய்யாமல் இப்படி தவறான சங்கதிகளை குறிப்பிட்டு எனது புகார் மனு நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதற்காகவா அந்த இணைய பிரிவு தொடங்கப்பட்டது. நல்ல நோக்கத்துக்காக அரசாங்கம் மக்களுக்கு ஏற்பாடு செய்யும் திட்டங்களை இது போன்ற சில அதிகாரிகள் தவறாக செயல்படுத்துவது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு மீண்டும் விரிவான புகார் அளிக்கப்படும் என்று சொன்னார்.
இது குறித்து மேலாளர் செங்கிஸ்கானை தொடர்பு கொண்டு கேட்ட போது சார் நான் ராணிப்பேட்டை மாவட்ட மேலாளர், வேலூரின் பொறுப்பிலிருந்து சென்றுவிட்டேன் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
நல்ல ஆபிஸர்...!?