துப்பாக்கியால் போலிசாரை தாக்கிய மோவாட் கொள்ளையர்கள்! தமிழக போலிசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்!

  துப்பாக்கியால் போலிசாரை தாக்கிய மோவாட் கொள்ளையர்கள்! தமிழக போலிசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்!

ம.பா.கெஜராஜ், 

 இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கேரள மாநிலம் திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கப்பட்டது. கேஸ் வெல்டிங் பயன்படுத்தி கொள்ளை போன இந்த சம்பவத்தில்  மொத்தம் ரூ.68 லட்சம் பறி போனது.

  கொள்ளையர்களின் கைவரிசையை அறிந்த திருச்சூர் போலிசார் எல்லை முழுவதிலும் சோதனைச்சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் இந்த கொள்ளை குறித்து தமிழ்நாடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

 அதன் பேரில் தமிழக போலிசார் அலார்ட் ஆனார்கள். அப்படியிருக்க  இன்று காலை சுமார் 7 மணி அளவில் கண்டெய்னர் லாரி ஒன்று, நாமக்கல் சாலையில் அதிவேகமாக சென்றது.  அப்படி போகிற போக்கில், பைக், ஆட்டோ உள்ளிட்டவற்றையும் இடித்துவிட்டு தாறுமாறாக ஓடியது.

 பொதுமக்கள் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். உடனே போலீசார் லாரியை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், போலீசாரின் வாகனங்களை மோதிவிட்டு லாரி எஸ்கேப் ஆக முயற்சித்துள்ளது. இதையடுத்து சுமார் 30க்கும் மேற்பட்ட பைக்குகளில் துரத்தி சென்று லாரியை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.       

 இந்நிலையில், லாரியில் இருந்தவர்கள் துப்பாக்கியை கொண்டு போலீசாரை தாக்க முயன்றுள்ளனர். உஷாரான போலீசார்  துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் லாரியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.

 அதிர்ந்து போன போலிசார்  யார் இவர்கள்? எதற்காக சோதனையிலிருந்து தப்பிக்க முயன்றனர்? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தினர். அந்த லாரிரில் திருச்சூர் ஏடிஎம் கொள்ளையர்கள் அதில் தப்பிச்சென்றனர் என்பது பின்னர் தான் தெரிந்தது.

 லாரி மூலம் தப்பிக்க முயன்றவர்கள் ஹரியானாவின் மேவாட் கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் லாரியை சோதனை செய்ததில், அதில் கட்டுக்கட்டாக பணமும், சொகுசு காரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளை அடித்துவிட்டு, கொள்ளைக்கு பயன்படுத்திய காரை, கன்டெய்னர் லாரியில் பதுக்கி தப்ப முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.

  அதனைத்தொடர்ந்து, லாரியில் பயணித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவன் தப்பிவிட்டான்.

 இது குறித்து போலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், பவாரியா கொள்ளையர்களை போலவே மேவாட் கொள்ளையர்கள்  ஆபத்தானவர்கள். ஆனால் அவர்களைவிட இவர்கள் புத்திசாலிகள் என்று போலீசார் கூறுகின்றனர். சர்வதேச அளவில், பல நாடுகளில் நடக்கும் கொள்ளை சம்பவங்களை படித்து தெரிந்துக்கொண்டு அதே பாணியில் பல்வேறு மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபடுவார்கள்.

   மேலும், கொள்ளை நடந்த மாநிலத்திலிருந்து உடனடியாக தப்பிப்பதை நோக்கமாக கொண்டிருப்பார்கள். எனவே, இவர்களை பிடிப்பது சவாலாக இருந்து வந்தது.

ஆனால் நாமக்கல் எஸ்.பி.ராஜேஸ்குமாரின் துரித நடவடிக்கையால் வெரி டேஞ்சர் கும்பல் பிடிபட்டது என்றார்கள்.