கோவை மாவட்டத்தில் கஞ்சா வேட்டை மூன்று நபர்கள் கைது!

ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் பகுதியில் (மதினா நகர் ஜங்ஷன் அருகில்) கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் திரு. செல்வநாயகம் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டார்.
அப்போது விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்புசாமி என்பவரது மகன் மாதேஷ் (35) மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி என்பவரது மகன் சிஜி (எ) ராஜு (37) ஆகியோர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கே.ஜி சாவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குமட்டிபதி பிரிவு எல்லை மாரியம்மன் கோவில் அருகே காவல் உதவி ஆய்வாளர் திரு.உதயசந்திரன் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனை மேற்கொண்ட போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவர் மகன் அருண் பிரகாஷ் (29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.