தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன!பிரதமரை சந்தித்த பின்னர் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் பேட்டி!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன!பிரதமரை சந்தித்த பின்னர் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் பேட்டி!

என்.நரேஷ்,

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன என்று டில்லியில் பிரதமரை சந்தித்த பின்னர் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் பேட்டியளித்தார்.

புதுடில்லி, செப்டம்பர், 27: அரசு முறை பயணமாக டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் முக. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். பிறகு தமிழ்நாடு அரசு இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மகிழ்ச்சியான சந்திப்பாக அமைந்ததாகவும், அதை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது அவரது கையில்தான் உள்ளது எனத் தெரிவித்தார்.

  மேலும், பிரதமர் நரேந்திர மோடியிடம், மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறினார்.

 அதில் முதலாவதாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, மத்திய அரசு, நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கி, அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

 இரண்டாவதாக, "தேசிய கல்விக் கொள்கை" புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடாத காரணத்தினால், மத்திய அரசின் தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க போதிய பணமில்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதமரிடம் எடுத்துக் கூறியதாக முதல்வர் முக. ஸ்டாலின் தெரிவித்தார்.

  மூன்றாவது கோரிக்கையாக, நமது, அண்டை நாடான இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும், அனைத்து கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, துறை சார்ந்த அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 இதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழக முதல்வர் முக. ஸ்டாலின், 'ஆட்சியிலும் பங்கு! அதிகாரத்திலும் பங்கு!' என திமுக கூட்டணி கட்சியான விசிக வலியுறுத்தி வருகிறதே! கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்களிக்க வாய்ப்புள்ளதா? என  தமிழக முதல்வரிடம் நமது டில்லி நிருபர் கேள்வி எழுப்பிய போது, அது விசிக-வின் நிலைப்பாடு எனவும், அவர்களின் கொள்கை சார்ந்த விஷயங்களை அவர்கள் பேசுவதாகவும், இதுகுறித்து அவர்களே தெளிவுபடுத்தி உள்ளதாகவும், ஊடகங்கள் தான் அதனைப் பெரிதுபடுத்துவதாகவும் கூறினார்.

  தமிழக மீனவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியுள்ள நிலையில், "கச்சத்தீவை" திமுக-காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தாரை வார்க்கப்பட்டதே தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கான காரணம் என பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, கச்சத்தீவை திமுக ஒன்றும் இலங்கைக்கு தாரை வார்க்கவில்லை எனவும், சொல்லப்போனால் கச்சத்தீவை தாரை வார்க்கும்போது திமுக எதிர்ப்பு தெரிவித்ததாக முதல்வர் பதிலளித்தார்.

  முன்னதாக சோனியாகாந்தி உடனான சந்திப்பு, மரியாதை நியமித்தமான சந்திப்பு மட்டுமே என தெரிவித்து விடைபெற்றார்.