அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போன் யூஸ் பண்ணக்கூடாது!உயர்நீதிமன்றம் அதிரடி!

அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போன் யூஸ் பண்ணக்கூடாது!உயர்நீதிமன்றம் அதிரடி!

 கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  தமிழக அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது

  தேவையின்றி செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

 பணி நேரத்தில் செல்போனில் வீடியோ எடுத்த விவகாரத்தில், அரசு ஊழியர் சஸ்பெண்ட் செய்ததற்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் சொந்த வேலைக்காக பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டார்.

 அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதை தடுக்க விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் செல்போன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.

 அலுவலக நேரத்தில் செல்போன் மூலம் எடுக்கப்படும் வீடியோக்களினால் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 அதே போல், பணி நேரத்தில் செல்போன் மூலம் வீடியோ எடுப்பது தொடர்பான விதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

 அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது நல்ல நடவடிக்கை அல்ல என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 4 வாரங்களில் இந்த உத்தரவை நிறைவேற்றவும், அரசு ஊழியர் விதிப்படி மருத்துவத் துறை செயலாளர் வழிகாட்டுதலை உருவாக்கி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் அவரது உத்தரவில் தெரிவித்துள்ளார்.