ஊருக்கு கரண்ட் கொடுக்க கிராமங்களை அழிப்பதா? உரிய நஷ்ட ஈடு கொடுங்க சாமி!!என்.எல்.சி.யிடும் கெஞ்சும் மக்கள்!!

ஊருக்கு கரண்ட் கொடுக்க கிராமங்களை அழிப்பதா? உரிய நஷ்ட ஈடு கொடுங்க சாமி!!என்.எல்.சி.யிடும் கெஞ்சும் மக்கள்!!

  ம.பா.கெஜராஜ்,

 கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி) இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மூன்று திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன.மேலும் இங்கே நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ள்ளிட்டஎன சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

 தற்போது இரண்டாவது சுரங்கம் விரிவாக்கப் பணிக்காக அருகே உள்ள கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதற்காக சுற்றியிருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளைக் கையகப்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை சுற்றியுள்ள பல கிராமங்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்திலுள்ள கிராமங்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ருப்பதை என்.எல்.சி நிறுவனமும், அரசாங்கமும் அறியும்.

   குறிப்பாக சொல்லவேண்டுமானால், சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளில் நெல் கரும்பு, உளுந்து, சிறு தானியங்கள், காய்கறிகள், பலா, முந்திரி என விவசாயம் அமோகமாக நடந்துக் கொண்டிருக்கிறது.

   இது அவர்களின் வாழ்வாதாரம்.

  இப்படி விவசாயத்தை நம்பி வாழும் விவசாய முதலாளிகளாகட்டும், விவசாய கூலி செய்யும் தொழிலாளர்கள் ஆகட்டும், அவர்களின் எதிர்கால சந்ததிகளின் வாழ்வு இருட்டு தான்.

 ஏனெனில் மேற்படி கிராம மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்படும் சொத்துக்களுக்கு என்எல்சி அறிவித்த இழப்பீடு, சந்தை மதிப்பைவிடக் குறைவாக உள்ளது. நிலம் இருந்தால் உழுது பிழைக்கலாம். அல்லது இழப்பீடு தொகை மார்க்கெட் ரேட்டுக்கு இருந்தால் அதைவைத்தாவது ஏதாவது தொழில் செய்யலாம். ஆனால் அதற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளார்கள்.

 இப்படி மக்களில் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் இந்நிறுவனம், எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கவேண்டுமல்லவா? ஆனால் அதையெல்லாம் அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

  அப்படியே அதற்கான செயல்வடிவத்தைக் கொடுத்தாலும் அவை கிராம மக்களின் வயிற்றில் அடிப்பதாகவே உள்ளது என்பதே அப்ப்குதிவாழ் மக்களி பரிதாப கருத்து. இந்த கருத்து புவனகிரி தாலுகா கத்தாழை ஊராட்சி கரிவேட்டி கிராம மக்கள் மத்தியில் அதிகபடியாக நிலவுகிறது.

 என்எல்சியின் நிலக்கரி எவ்வளவு, ஒரு யூனிட் மின்சாரம் எவ்வளவு என்ற விலையை அவர்கள் நிர்ணயம் செய்கிறார்கள். அதே போல் தான் எங்கள் அசையா சொத்துகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை எங்களுக்கே உண்டு என்பது இவர்களின் வாதம்.

  மேற்படி அரசு நிறுவனம் தன்னிச்சையாக நிலம் கையப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த பிரச்சனை இந்த ஒரு கிராமத்தைச் சார்ந்தது மட்டுமில்லை. சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களும் இதுபோன்று பாதிக்கப்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்," என்றும் கோருகிறார்கள்.

  இது போன்ற குற்றச்சாட்டுகளைக் குறித்து என்.எல்.சி நிர்வாக செயல் இயக்குநர் சதிஷ்பாபு, சில தகவல்களை சொல்லியிருக்கிறார்.

 அதில், "என்எல்சியில் இரண்டாவது சுரங்கம் விரிவாக்க பணிக்கு நிலம் தேவைப்படுகிறது. ஆகவே நியாயமான இழப்பீடு பெரும் உரிமை மற்றும் நிலம் கையப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வில் ஒளிவு மறைவற்ற தன்மை சட்டம் 2013ன் படி இழப்பீடு தொகை மற்றும் இதர பலன்களைக் கொடுத்து வருகிறோம். "

"ஆனால் இந்த சுற்றுவட்டார கிராம மக்களின் எதிர்பார்ப்பைக் கருத்தில்கொண்டு அரசின் ஒப்புதலுடன், ஒரு புதிய நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு கொள்கையை வடிவமைத்துள்ளோம். அந்த சட்டத்தின் அடிப்படையில் நிலத்திற்கான இழப்பீட்டைக் குறைந்தபட்சம் ரூ.23 லட்சமாக உயர்த்தியுள்ளோம். கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு இழப்பீடு ரூ.40 லட்சமும், நகரப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு ரூ.75 லட்சமும் குறைந்தபட்ச தொகையாக நிர்ணயித்துள்ளோம்,"

   ''சில காரணத்திற்காகவும், குறிப்பாக நிறுவனத்தில் காலி பணியிடங்கள் இல்லாத காரணத்தினாலும் அனைவருக்கும் வேலை வழங்க முடியாது என்பதால், அதற்கு பதிலாக உதவித் தொகையை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  அதன்படி ''வேலைக்குப் பதிலாக ஒருமுறை பயனாக ரூ.10 லட்சமும், ஒரு ஏக்கருக்கு மேல் இருந்தால் ரூ.13 லட்சமும், இரண்டு ஏக்கருக்கு மேல் இருந்தால் ரூ.15 லட்சம் வழங்க இருக்கிறோம்.

   இந்த ஒருமுறை பயன் வேண்டுமென்றால், ரூ.10 லட்சத்திற்குப் பதிலாக மாதம் தோறும் ரூ.7000, ரூ.13 லட்சத்திற்குப் பதில் ரூ.8,500, ரூ.15 லட்சத்திற்குப் பதிலாக ரூ.10,000 மாதம் ஊதியமாக அடுத்து 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.''

   மேலும், ''இதில் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். வீட்டு மனையை எடுக்கும் பட்சத்தில், அந்த வீட்டு மனைக்குப் பதிலாக 5 செண்ட் நிலம் வழங்கப்படும். அதில் 1000 சதுர அடி அளவில் அடுக்குமாடி வீடு கட்டித்தரப்படும்," என்றும் என்எல்சி நிர்வாக செயல் இயக்குனர் சதிஷ் பாபு தெரிவித்துள்ளார்.

 அந்த நிறுவனம் கிராம மக்களுக்கு அல்வா கொடுக்கிறது என்பது அவர் சொல்வதை கேட்கும் போதே புரிகிறது.

 ஊருக்கு மின்சாரம் கொடுப்பதாக சொல்லும் சுரங்க நிறுவனம், சொந்த கிராமத்தை இருளில் மூழ்கடிப்பது நியாயமில்லைதான்.

    விரிவாக்கம் என்பது அரசின் கொள்கை முடிவு தான், ஆனால் அதற்காக மக்களை வயிற்றில் அடிப்பது கொள்கை முடிவில்லையே ஆகவே அதை மறு பரிசீலனை செய்யலாமே என்கிறார்கள் மக்கள்.

 மக்கள் பேச்சை அதிகார பீடம் கேட்கவா போகுது?

 இந்த தொகுதியில் திமுக வைச் சேர்ந்த சபா.ராஜேந்திரன் என்பவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், இவர் பா.ம.க.வைச் சேர்ந்த ஜெகன் என்பவரிம் 977 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

 ஒருவேளை பா.ம.க. வென்றிருந்தால் அங்கு இது தொடர்பாக வேறு விதமான போராட்டக்களம் அமைந்திருக்கும்.