விபச்சாரத்துக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகை! உரிமையாளரை எஸ்கேப் செய்ய வைத்தது யார்?

   விபச்சாரத்துக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகை! உரிமையாளரை எஸ்கேப் செய்ய வைத்தது யார்?

ம.பா.கெஜராஜ்,

விபச்சார தொழில் நடத்த மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு வாடகை விட்டவரை போலிசார் தேடி வருகிறார்களாம்.

 வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாநகராட்சியின் மண்டலம்-2 அலுவலகம் உள்ளது. அதன் நேர் எதிரில் கீதா சர்வீஸ் அபார்ட்மென்ட்ஸ் என்கிற பெயரில் உணவு மற்றும் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.

 அங்கு அக்கம் பக்கம் குடியிருப்புகளும், நேரு நகர் என்கிற பகுதியும் உள்ளன.

  இந்த கட்டிடத்தின் உரிமையாளரின் பெயர் விஜயகுமார். கீதா டிம்பர்ஸின் உரிமையாளரான இவர், கட்டிடத்தை வேறு நபருக்கு மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு வாடகை விட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. விபச்சாரம் நடத்துவதற்காகவே கூடுதல் வாடகை வசூலிக்கப்பட்டதாம்.

  அப்படியிருக்க மேற்படி விடுதியில் ஆந்திர அழகிகளை தங்க வைத்து விபச்சார தொழில் நடைபெற்று வந்தது. இது பற்றி அந்த பகுதியினர் பலமுறை போலீசுக்கு புகார் அளித்தனர். ஆனால் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

 குறிப்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக இருந்தவர் விபச்சாரம் நடத்தியவர்களை பிடித்து ஸ்டேஷன் பைலில் வழியனுப்பிவைத்தார்.

 இது பற்றி அப்போதைய எஸ்.பி.திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்களுக்கு தெரிய வந்ததும் சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை  காத்திருப்போர் பட்டியலுக்கு  மாற்றி நடவடிக்கை எடுத்தார்.

 அதிகாரிகள் மாற்றங்களுக்கு பின்னர் மீண்டும் அந்த கட்டிடத்தில் விபச்சார தொழில் மீண்டும் நடப்பதாக புகார்கள் பறந்தன.

ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே இது பற்றி ஒரு முக்கிய துறையைச் சார்ந்தவரின் பார்வைக்கு விவகாரம் சென்றது. அவர் வாயிலாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

 சத்துவாச்சாரி காவல் நிலையத்தார் நடத்திய அதிரடிய சோதனையில், விபச்சாரம் தொழிலை முன்னின்று நடத்திய   அடுக்கம்பாறை சேர்ந்த நிருபன் விஜய், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த அனீஸ், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த கௌதம் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  மேலும் ஆந்திரா, சென்னை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 6 பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

 ஆனால் இந்த குற்றத்துக்காக கீதா சர்வீஸ் அபார்ட்மென்ட் கட்டிடத்தை தெரிந்தே வாடகை விட்ட உரிமையாளர் விஜயகுமார் கைது செய்யப்படவில்லை. சிலர் தயவால் அவர் தப்ப வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

யார் அந்த காக்கி?

குறிப்பு:-கீதா சர்வீஸ் அபார்ட்மெண்ட்ஸ் என்கின்ற மேற்படி விபச்சாரம் நடந்த கட்டிடத்தை சீல் வைக்க வேண்டும் என்பது அப்பகுதிவாசிகளினுடைய கோரிக்கையாக உள்ளது.