இராணிப்பேட்டை ஆட்சியரின் கடைசி ஆய்வு! அதிக மருந்து என்கிற புகாரால் சலசலப்பு!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ச.வளர்மதி. இவருக்கு மாறுதல் கிடைத்திருக்கும் நிலையில் அவருக்கு மாற்றாக சந்திரகலா இ.ஆ.ப.அவர்கள் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் ஆட்சியர் வளர்மதி தமது கடைசி ஆய்வை நடத்தினார்.

 அந்த வகையில், வாலாஜா  அருகே  குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தனர்,

 இந்நிலையில் வாலாஜா அடுத்த அம்மூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்புத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

 அதனைத்தொடர்ந்து மழைக்காலம் என்பதால் வீடு வீடாக சென்று மழைநீர் தேங்கியுள்ளதா? சுகாதாரமான முறையில் குடிநீர் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

 அதில் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து குடிநீர் போர் பைப் லைன் வால்வு மூலமாக குடிநீரில் கலந்து வருவதாகவும் இதை அருந்திய குழந்தைகள் 21 பேர் மருத்துவமனைகளில் வயிற்றுப்போக்கு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக பொதுமக்கள் ஆவேசமாக ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

  மேலும் இதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சேதமடைந்துள்ள கழிவுநீர் கால்வாயை சீர் அமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

 தொடர்ந்து ஆட்சியர் புகாரின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு துரித நடவடிக்கை மேற்கொள்வதாக பொதுமக்களிடம் ஆட்சியர் உறுதி அளித்தார்.

  இது குறித்து மக்கள் தெரிவிக்கையில், எங்க ஊரில் தண்ணீர் சரியில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மாற்று ஏற்பாடாக ஒரு வீட்டுக்கு நாலு குடம் தான் தண்ணீர் தருகிறார்கள். அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது. எங்களுக்கு டேங் தண்ணீர் வேண்டாம்.  அதை கொடுப்பதால் தான் எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனை வருது. அதுல நிறைய மருந்து போடறாங்க. அதுல செய்த சாப்பாட்டை இரண்டு நாட்கள் வெளியில் கொட்டினேன். என்று அந்த கிராம மக்கள் சொன்னார்கள்.

 இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.