சைரன் காரில் வலம்...தேர்வு அறிக்கை சமர்பிக்கவில்லை! வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்டு!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக இருந்தவர் நேசபிரபா. இவரை பள்ளிக்கல்வித்துறை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
அதற்கான காரணம் கூறப்படுவதாவது:- இன்று மார்ச் - 1 ஆம் தேதி ப்ளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வுக்கான் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது. அந்த வகையில் இந்த பொதுத் தேர்வு தொடர்பான என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கவில்லையாம்.
பொதுத்தேர்வு பணிகளில் அலட்சியம் காட்டியதுடன் வினாத்தாள்களையும் பெற்று வராமல், பணியில் சரியாக செயல்படாததால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, நேசபிரபா சரியாக செயல்படவில்லை என சென்னை பள்ளிகல்வித்துறைக்கு புகார் அளித்தார்.
அதே போல் ஆசிரியர்களிடம் பண வசூல் நடத்தியிருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது மேலதிகாரிகளுக்கு தட்டிவிடப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த அம்மணி அவர் பயணிக்கும் காரில் சைரன் வைத்துக்கொண்டுதான் போவாராம். கல்வித்துறை இயக்குநர் காரிலேயே சைரன் பொருத்திக்கொள்ள அனுமதி இல்லை என்கிற நிலையில், இந்தம்மா காரில் சைரன் வைத்துக்கொண்டு பந்தாவாக வலம் வருவாராம்.
அதே போல் அவரது கனவருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், இவர் விடுப்பு எடுக்காமலேயே வீட்டில் இருந்து கொள்வாராம். எனக்கு என்னுடைய வேலையைவிட கணவர் நலம் தான் முக்கியம் என்று சொல்வாராம். இது அடிக்கடி நடக்குமாம்.
இது போன்ற பல காரணங்களுக்காகவே வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா சஸ்பெண்டு செய்யப்பட்டாராம்.
இது குறித்து கல்வித்துறையின் சார்பில் தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் தேர்¢வு பணிகளில் சுணக்கமாக இருந்தாலோ, முறைகேடுகளுக்கு உடந்தையாக செயல்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.