ஜனாதிபதி விருது பெற்ற சங்கர் ஜிவால் டிஜிபியாக இன்று பொறுப்பேற்கிறார்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் செயல்பட்ட சைலேந்திரபாபு இன்று ஒய்வு பெறுகிறார்.
அவருக்கு பதில் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கமிஷனராக சென்னையில் முத்திரை பதித்த இவர் தமிழ்நாடு முழுவதும் தனது சிறப்பு முத்திரையை தொடருவார் என்பதில் அய்யம் இல்லை.
சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தமிழக போலீஸ் துறையில் பணியில் சேர்ந்தார். மன்னார்குடி, சேலம் ஊரகப் பகுதி போன்ற இடங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். சேலம், மதுரை உள்பட மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக சிறப்பாக பணியாற்றினார். இவர் 'கியூ' பிரிவிலும் பணியாற்றி முத்திரை பதித்தார். 2 ஆண்டுகள் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் தென் மண்டல இயக்குனராகவும் திறம்பட பணியாற்றியவர்.
சென்னையின் 108-வது போலீஸ் கமிஷனராக 2021-ம் ஆண்டு சங்கர் ஜிவால் பதவியேற்று 2 ஆண்டுகள் சிறந்து விளங்கினார்.
சிரித்த முகத்துடன் தமிழில் பேசும் அவர் பணியில் கண்டிப்பானவர். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயும். அதே நேரத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு வாரந்தோறும் ரொக்க பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டவும் செய்வார்.
மாதந்தோறும் பணியில் சிறந்து விளங்கிய ஒருவரை தேர்வு செய்து அவருக்கு நட்சத்திர போலீஸ் விருதையும் வழங்கி வந்தார்.! சாதனை பயணம் சங்கர் ஜிவால் சென்னை போலீஸ்துறையை தற்கால நவீன உலகத்துக்கு அழைத்து சென்றார். சிற்பி, அவள், பறவை, மகிழ்ச்சி, ஆனந்தம், காக்கும் காவல் கரங்கள் போன்ற சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வந்தார்.
அந்த கால கட்டத்தில் அதிகளவில் 'ஹெராயின்' போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தன கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட ஈரோடு சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படையில் 6 ஆண்டுகள் பணியாற்றியவர். திருச்சி போலீஸ் கமிஷனராகவும், உளவுப்பிரிவில் டி.ஐ.ஜி., ஐ.ஜி.யாகவும் பணி செய்துள்ளார். இவரது சிறந்த காவல் பணியை பாராட்டி கவுரவிக்கும் விதமாக இவருக்கு கடந்த 2007, 2019-ம் ஆண்டுகளில் ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது.
இன்று பதவி ஏற்பு தமிழ்நாட்டின் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுக் கொள்கிறார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சைலேந்திரபாபு விடை பெறுவார். இன்று மாலையில் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு மைதானத்தில் சைலேந்திரபாபுக்கு பாரம்பரியப்படி வழி அனுப்பு விழா நடைபெறவுள்ளது.