நள்ளிரவில் பின் வாங்கிய ஆளுநர்! செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்திவைப்பதாக முதல்வருக்கு தகவல்!

ம.பா.கெஜராஜ்,
அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்திவைக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நள்ளிரவில் தகவல் அனுப்பியிருக்கிறார். ஏற்கனவே ஆன்லைன் ரம்மி தடைக்கான தீர்மானத்தில் பின் வாங்கிய ஆளுநர் அவர்கள், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி நீக்க விவகாரத்திலும் அப்படியே செயல்பட்டிருக்கிறார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
ஆளுநர் மாளிகை அறிவிப்பு
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை செந்தில் பாலாஜி எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளார். தற்போது அவர் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். மேலும், ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
எனவே, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது. வழக்கு விசாரணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கி உள்ளார். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியிருக்க, செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அப்பாவும் தெரிவித்துள்ளார். அதேசமயம், ஆளுநர் மாளிகையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து எந்த தகவலும் வரவல்லை என்று கூறிய சபாநாயகர், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, பதவி நீக்கத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளப்படும் என்று உறுதிபட தெரிவித்தனர்.
இந்நிலையில், அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை? ஆளுநரின் செயல் சட்டத்துக்கு புறம்பானது, இது ஜனநாயக நாடா அல்லது கவர்னரின் சர்வாதிகார நாடா என கேள்வி எழுப்பினார்.
அப்படியிருக்க செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ரவி கிடப்பில் போட்டுள்ளார் என தகவல் வெளியானது. மேலும், இது தொடர்பாக இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசனை கேட்க உள்ளதாகவும், அதுவரை பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் ஆர்.என்.ரவி நள்ளிரவில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
செந்தில் பாலாஜி மீதான அமலாக்க துறையின் நடவடிக்கையில் அது ஒருபடி கூட முன்னேற முடியாதபடிக்கு திமுக வின் வழக்கறிஞர் பிரிவு சட்டத்தை சாதுர்யமாக கையாண்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த சூழலில் சட்டபடியான நகர்வுகளை முதலமைச்சர் தெளிவாக மக்கள் மன்றத்தில் அறிவிக்கிறார். ஆனால் ஆளுநர் மாளிகையானது அவசர குடுக்கையாக செயல்படுவதையும் மக்கள் கவனிக்கிறார்கள்.
குறிப்பாக செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரிடம் அ.தி.மு.க.புகார் மனுவை அளித்ததையும், அதை நம்பி ஆளுநர் சட்ட ஆலோசனைக்கூட கேளாமல் நேற்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதையும் பொதுமக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.
நள்ளிரவில் ஆளுநர் பின்வாங்கிக்கொண்டு, அதன் பின்னர் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசனை கேட்கப்படும் என காரணம் சொல்லப்படுவது குரோத மனப்பான்மை உள்ளதை பறைசாற்றுகிறது. ஆக, ஆளுநர்கள் சட்டத்துக்கு புறம்பாக மாநில அரசை ஆட்சி செய்ய முயன்றால், அவை சட்ட போராட்டத்தை கையில் எடுக்கும் என்பதற்கு நள்ளிரவில் ஆளுநர் பின்வாங்கிய இந்த சம்பவமே சாட்சி.
இந்நிலையில் நிரந்தர தீவுக்காக சட்ட வல்லுநர்களுடன் இன்று மேலும் ஆலோசனை செய்ய உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.