தப்ப முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிசூடு நடத்திய போலீசார்! காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு!

கு.அசோக்,
இராணிப்பேட்டை, சிப்காட் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டார். தப்பிக்க முயன்ற போது அவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்குள் நேற்று முன் தினம் நள்ளிரவு நேரத்தில் முகமூடியுடன் நுழைந்த சில நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். இந்த நிலையில், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடுதல் வேட்டை நடத்தினர்.
தனிப்படையினர் பெங்களூரு, சென்னை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்றனர். அப்போது சென்னையில் பதுங்கியிருந்த மூவரை இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீஸ் டீம் பிடித்து இராணிப்பேட்டைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது வாலாஜா டோல்கேட் பகுதியில் வாணிசத்திரம் என்ற பகுதில் சிறுகழிக்க வேண்டும் என்று, கைதானவர்களில் ஒருவனான ஹரி போலீசாரிடம் கேட்டதும், வாகனம் நிறுத்தப்பட்டது.
அப்போது அவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சப் இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரனின் கையை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றான்.
அவனை இன்ஸ்பெக்டர் சசிகுமார் தடுத்த போது அவரையும் கத்தியால் குத்த பாய்ந்தான். சற்று விலகிய இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை எடுத்தார். அதைப் பார்த்த ஹரி தப்பி ஓட முயன்ற நிலையில் இன்ஸ்பெக்டர் இரண்டு முறை சுட்டார். அதில் ஒரு குண்டு ஹரியின் கால் முட்டி பகுதியில்பட்டது. தப்பி ஓட முயன்ற ஹரி கீழே விழுந்தான், அப்போது அவனது இடது கை முறிந்தது. அப்போது அவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
அதே போல், கத்தி வெட்டுபட்ட சப் இன்ஸ்பெக்டரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது.
இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட ஹரியினுடைய தந்தை சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். அவர் பொதுமக்களை மடக்கி பணம் கேட்டு பறிப்பதை தொடர்ந்து செய்வான். பணம் தரவில்லை என்றால் பெட்ரோல் பாம் போடுவேன் என்று மிரட்டுவான். அதே சங்கதிதான் இதுவும்.