ரிடையர்டு ஆனவர்கள் தான் பாரதிய ஜனதாவுக்கு செல்வார்கள்! முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி!

டி.இ.முகமது,
அதிமுக முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி. உட்பட தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 16 பேர் நேற்று பாஜகவில் இணைந்தனர்.
தலைமையின் அழைப்பை ஏற்று அண்ணாமலை நேற்று டெல்லி சென்றார்.
பிறக்கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
அப்போது தமிழகத்தின் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி. என 16 பேர் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் தங்களை பாஜகவில் நேற்று இணைந்தனர்.
கரூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.வடிவேல், கோவை முன்னாள் அதிமுக எம்எல்ஏ சேலஞ்சர் துரைசாமி, பொள்ளாச்சி முன்னாள் அதிமுக எம்எல்ஏ எம்.வி.ரத்தினம், சிங்காநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளருமான ஆர்.சின்னசாமி, அரவக்குறிச்சி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பி.எஸ்.கந்தசாமி, தேனி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வி.ஆர்.ஜெயராமன், வலங்கைமான் தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சர் கோமதி சீனிவாசன், வேடசந்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ எஸ்.எம்.வாசன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்ததாக செய்திகள் வெளியான நிலையில், பதறிப்போன முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்கள் கூறுகையில், 'கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் பா.ஜ. க. சேர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுபற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் பாஜக வுக்கு போக மாட்டார்கள். வயதானவர்கள், 80 வயதுக்கு மேல் உள்ள ரிடையர்டு ஆனவர்கள்தான் பாரதிய ஜனதாவுக்கு செல்வார்கள். தமிழகத்தில் அதிமுக வலுவான கட்சியாக வலம் வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்' என்று சொல்லி சமாளித்தார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்திருக்கிறார்கள் என்றால், அநேகமாக அவர்கள் கட்சியில் செயல்படாதவர்களாக தான் இருக்கும் என்று ஓசூரில் கேபிமுனுசாமி தெரித்த நிலையில் வேலுமணியும் இதைப்பற்றி பேசி சமாளித்திருக்கிறார்கள்.