கிடப்பில் கிடந்த அரசு ஃபைலை தூசு தட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி! விடுதலை செய்யப்பட்ட சிறைவாசிகள்! கண்ணீர் மல்க பேட்டி!

உ.சசிகுமார்,
தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் 25 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 12 பேர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட இஸ்லாமிய சிறைக் கைதிகள் தங்கள் மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றின விவரம் வருமாறு,
பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி திமுக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தது. ஆனால், பல வருடங்களாக இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வந்தார்.
இதற்கு திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதே நேரத்தில், பாஜகவோ முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என தெரிவித்தது. மேலும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களை விடுதலை செய்ய நாங்கள் விட மாட்டோம் என மறுத்துவிட்டது.
இந்த சூழலில், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ரவி அண்மையில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நீண்டகாலமாக சிறையில் இருந்த 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் சிறைக் கைதிகள் ஆவர். இந்நிலையில், பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் அவர்களின் அனுபவம் குறித்து தனியார் ஊடகத்துக்கு பேட்டி கொடுத்தனர்.
சாகுல் ஹமீது:
கடந்த 25 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை சிறைவாசியாக சிறையில் இருந்தேன். இப்போது விடுதலையானதை நினைக்கும் போது அதை நம்ப முடியல. குடும்பத்தினரை பல வருடங்கள் கழித்து பார்த்த போது ஒன்னும் பேச முடியல. கண்ணீர் தான் வந்து கொண்டிருந்தது. இது எங்களுக்கு கிடைத்த இரண்டாவது வாழ்க்கை என்று தான் சொல்ல தோணுது.
இறந்து புதைக்கப்பட்ட மனிதனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தால் அவன் எப்படி உணர்வானோ, அதே மனநிலையில்தான் நாங்க இருக்கோம். சிறைச்சாலை என்பதே ஒரு நடமாடும் சுடுகாடு தான். வாழ்க்கையே எங்களுக்கு இல்ல.
இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாங்கள் விடுதலை ஆகியிருக்கிறோம். உலகம் புதுசா இருக்கு. மனிதர்கள் புதுசா இருக்காங்க. அவங்களோட இனிமேல் தான் பழகணும். நான் சிறைக்குள் போகும் போது ஒயர் போன் தான் இருந்துச்சு. இப்போ போனிலேயே ஒருத்தரை ஒருத்தர் பாத்து பேசுறாங்க என்று வியப்பு கலந்து பேசினார்.
முகமது இப்ராஹிம்:
நான் ஆயுள் தண்டனை சிறைவாசியாக கோவை மத்திய சிறையில் இருந்தேன். சிறையில் அனுபவித்த துன்பங்கள் ஒன்று இரண்டல்ல. 18 வயதில் சிறைக்குள் சென்றேன். 45 வயதில் வெளியே வந்திருக்கிறேன். இந்த உலகமே ரொம்ப புதுசா இருக்கு.
இந்த உலகத்தில் நானும் இனி வாழப் போறேன் என்று நினைக்கையில் மனதில் புது மகிழ்ச்சி வருகிறது. நான் சிறைக்கு சென்ற சமயத்தில், கோவையில் பல பகுதிகள் மணல் மேடுகளாக இருந்தன. இப்போது அனைத்தும் மாட மாளிகைகளாகவும், பல அடுக்கு வீடுகளாகவும் மாறியிருக்கின்றன. கோவையில் தான் இருக்கிறோமோ என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.
சிறை என்ற நரகத்துக்குள் மீண்டும் போக மாட்டோம் என்று நினைக்கும் போதே நிம்மதியாக இருக்கிறது. மாலை 6 மணிக்கெல்லாம் இருட்டு அறைக்குள் தள்ளி விடுவார்கள். எப்போதுமே மன உளைச்சலாகவும், மன இறுக்கமாகவும் இருக்கும். இப்போது தான் நன்றாக சுவாசிப்பதை போல இருக்கிறது.
குடும்பத்தோட அருமை என்ன என்று இப்போது தான் தெரியுது. மனைவி, குழந்தைகளோட அன்புனா என்ன என்று தெரியுது. ஆனால், இந்த புது உலகத்துல நான் என்ன வேலை செய்யப் போகிறேன் என்று நினைக்கும் போது பயமாக இருக்கிறது.
அரசுக்கு மிக்க நன்றி என்றார்கள்.